கோவை, ஜூன் 5-தமிழக மின்சார வாரியத் துறையில் வேறு மாநிலத்தைச் சேர்ந்த 38 பேரை அதிகாரிகளாக நியமித்துள்ளதைக் கண்டித்து கோவை மண்டல தலைமை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு மின்வாரியத்தில் சமீபத்தில் 325 துணை மின் பொறியாளர் பணியிடங்களுக்கானத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின் மூலம் ஆந்திரா,கேரளா, மகாராஷ்டிரா உட்பட வெளிமாநிலத்தை சேர்ந்த 38 பேர் அதிகாரிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து கோவை டாடாபாத் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய மண்டல அலுவலகத்தைத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது, மின் வாரிய அலுவலகத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளைத் தாண்டி உள்ளே செல்ல முயன்றனர். அப்போது, காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்த முற்பட்டனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் மறியலாக மாறியது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது, மோடியின் வழிகாட்டுதலின் பேரில் இந்தத் திட்டத்தை தமிழக அரசு அப்போது கொண்டு வந்தது. முதற்கட்டமாக, தற்போது 38 துணை மின் பொறியாளர் பணியிடங்களில் ஆந்திரா,கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் வேலையில்லாமல் இருக்கும் தமிழக இளைஞர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மாநில அரசு பணிகளில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடமில்லை என்ற சட்டத் திருத்தத்தை உடனடியாக தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து,போராட்டத்தில் ஈடுபட்டவர்களைகாவல் துறையினர் கைது செய்தனர்.