tamilnadu

img

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியை ஆட்டம் காணச் செய்யும் ஆபத்து - வே.தூயவன்

அமெரிக்கா, பிரிட்டனில் 4500க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் மூடல்!

அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் 2019ஆம் ஆண்டில் மட்டும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் முன்னணி பிராண்ட் நிறுவனங்களின் 4500க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி சரிவைச் சந்திக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.  ஏற்கெனவே இந்த நிலை தொடங்கிவிட்டது என்று திருப்பூர் தொழில் துறையினர் கவலையோடு தெரிவிக்கின்றனர். இது பற்றிய விபரம் வருமாறு: பிசினஸ் இன்சைடர் என்ற இணைய ஏடு 2019ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 4300க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படுவதாக செய்தி வெளி யிட்டுள்ளது. குறிப்பாக கேப், ஜேசிபென்னி, விக்டோரியா சீக்ரெட், ஜிம்போரி, ஷாப்கோ, சார்லட்டி ரஸ்ஸி,  சியர்ஸ், கேமார்ட், கிரிஸ்டோபர் அன் பேங்க்ஸ், ஹென்றி பென்டல், லோவீஸ், மெக்கீஸ், ஜெ கிரிவ் என பல்வேறு பெயர்களில் உள்ள முன்னணி ஆடை விற்பனை நிறுவனங்கள் அமெரிக்கா முழுமையிலும் கிளை பரப்பியுள்ள சில்லறை விற்பனை நிறுவனங்களாகும். இந்த நிறுவனம் ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் நான்கைந்து கடைகளில் இருந்து அதிகபட்சம் 800 கடைகள் வரை மூடப் போவதாக பட்டியல் வெளியிட்டுள்ளன. இது தவிர மிகப்பெரிய ஷூ விற்பனையகமான பேலெஸ் நிறுவனம் அமெரிக்கா முழுமை யிலும் தனது ஒட்டுமொத்தமான 2500 கடைகளையும் வரும் பிப்ரவரி மாதம் மூடப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

காரணங்கள் என்ன?

மிகப்பெரிய நிறுவனங்களின் ஆதிக்கம், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் மூலம் பொருட்களை நுகர்வோர் வாங்குவது அதிகரிப்பது ஆகிய காரணங்களுடன், நிறுவனத்தில் விற்பனை குறைந்து, திவால் நிலையை அடையும் கட்டத்தை எட்டிவிட்டதால் இது போல் சில்லறை விற்பனைக் கடைகளை அங்கு மூடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர பிரிட்டனின் முன்னணி பிராண்ட் நிறுவனமான மதர் கேர் தாய் சேய் ஆடை விற்பனையகம் ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ 1000 கிளைகளைப் பரப்பியுள்ளது. இதில் பிரிட்டனில் உள்ள 353 கடைகளையும் மொத்தமாக மூடுவதென முடிவு செய்துள்ளது. 58 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க இந்த நிறுவனம் நவீன காலத்தின் வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஈடு கொடுக்காததால் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதாக ஏடுகள் எழுதி வருகின்றன. ஆனால் பொருளாதார நெருக்கடி நிலை, விற்பனை வீழ்ச்சி ஆகியவையே இதுபோன்ற கடுமையான முடிவுகளை நோக்கித் தள்ளியுள்ளது.

இன்னும் தீவிரமடையும்!

இது தவிர யுஎஸ்ஏ டுடே என்ற இணைய இதழ் 2019ஆம்  ஆண்டில் மொத்தம் 9100 கடைகள் மூடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2018ஆம் ஆண்டு மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கையை விட 55 சதவிகிதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது. சில்லறை விற்பனைக் கடைகளை மூடும் நிலை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. எனினும் 2017, 2018ஆம் ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிக  கடைகள் மூடப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு இந்த  எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக சில்லறை வர்த்தகத் துறையை ஆய்வு செய்யும் கோர்சைட் எனும் அமைப்பு கூறியுள்ளது. இவை எல்லாவற்றையும் விட யூபிஎஸ் செக்யூரிட்டீஸ் எனப்படும் அமெரிக்காவின் முக்கியமான பங்குச்சந்தை நிதி சார் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இணைய வர்த்தகம் இப்போதுள்ள 16 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக அதிகரித்தால் 2026ஆம் ஆண்டு வாக்கில் ஏறத்தாழ 75 ஆயிரம் சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படும் என்றும் கணித்துள்ளது. அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங் களின் வளர்ச்சி ஒருபுறம் இந்நிலையை ஏற்படுத்தினாலும், பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகளும் சேர்ந்துதான் சில்லறைக் கடைகளை மூடும் நிலையை ஏற்படுத்தி வருவதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கும் இந்திய ஏற்றுமதி

இதுபோல் சில்லறை வியாபாரக் கடைகளுக்கு இந்தியா, வங்கதேசம், சீனா, வியட்நாம், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பையர்கள் எனப்படும் கொள்முதல் செய்வோர் மூலம் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படும் நிலையில் ஆடைகள் கொள்முதல் செய்வதும் சரிவடைகிறது. இது ஆடை ஏற்றுமதி நாடுகளை பாதிக்கி றது. குறிப்பாக இந்தியா இதனால் கடும் பாதிப்பைச் சந்தி க்கும் என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். அதற்கு மிக முக்கியக் காரணம், விலைதான்! பிற நாடுகளுடன் போட்டியிட்டு குறைந்த விலையில் ஆடை  தயாரித்துத் தரக்கூடிய நிறுவனங்கள்தான் தாக்குப்பிடிக்க முடியும். ஆனால் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர்கள் சர்வதேசப் போட்டியைச் சந்திப்பது சவாலானதாக உள்ளது. மூலப்பொருள் வளம் இருந்தாலும் கூட, உள்நாட்டில் அரசின் ஆதரவான கொள்கை இல்லாதது, கட்டமைப்பு வசதி குறைவு, மின்சாரம், நூல், உப பொருட்களின் தொடர் விலையேற்றம், அரசின் ஜிஎஸ்டி வரி நடைமுறை, டிராபேக் குறைப்பு, ஆர்ஓஎஸ்எல் எனப்படும் வரித் தொகை திரும்பத் தராமல் இருப்பது என பல காரணங்களால் கட்டுபடியான விலையில் ஆடை உற்பத்தி செய்வது சவாலானதாக இருப்பதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

திருப்பூரின் நிலை

மதர் கேர் நிறுவனம் தனது பிரிட்டன் கடைகளை மூடிய நிலையில் திருப்பூரில் தனது கொள்முதலை நிறுத்திக் கொண்டதாகவும் தகவல் பரவியுள்ளது. மேலும் திருப்பூரின் நான்கைந்து முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களுக்குத் தர வேண்டிய பில் தொகை ரூ.300 கோடிக்கு மேல் தராமல் நிறுத்தி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மதர்கேர் மட்டுமின்றி மேலும் பல ஆடை கொள்முதல் வர்த்தக நிறுவனங்களும் மூடப் போவதாக அறிவித்துள்ள தாக ஏற்றுமதியாளர் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இவையெல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இப்போதுள்ள திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி அளவு இந்தாண்டு குறைந்தபட்சம் ரூ.2500 கோடி குறையும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சிக்கலில் இருந்து மீள்வதற்காக “கட்டுபடியான விலை”க்கு ஆடை உற்பத்தி செய்வதற்கு பிரதான ஏற்றுமதி நிறுவனங்கள் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதில் ஒன்று கட்டமைப்பு சீரமைப்பு என்ற பெயரில் தங்களிடம் உள்ள மேலாளர்கள் நிலை யிலான இடைநிலை நிர்வாக அலுவலர்களை (மிடில் மேனஜ்மெண்ட்) வெளியேற்றி வருகின்றனர். ஏறத்தாழ 1500 அலுவலர்கள் பெரிய ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்து  வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர் என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். ஒரு நடுத்தர ஏற்றுமதியாளரிடம் பேசியபோது, இத்தகவல் உண்மைதான் என உறுதிப்படுத்தினார். வேலை  இழப்போர் இதைவிட அதிகமாகத்தான் இருக்கும் என்றும் அவர் கூறினார். அவரது நிறுவனத்திற்கே ஒருவர் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளார். மாதம் ரூ.82 ஆயிரம் ஊதியம் பெற்றுக் கொண்டிருந்தவர், கடந்த தீபாவளிக்கு அவர் வேலை செய்த ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.2 லட்சம் போனஸ் பெற்றிருக்கிறார். இப்போது வேலையை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டார். இங்கு ரூ.40 ஆயிரம் மாத சம்பளம் கொடுத்தால் போதும், வேலை கொடுங்கள். ஐந்தாண்டு காலத்துக்கு உத்தரவாதமாக இங்கேயே வேலை செய்வேன் என உறுதிமொழி எழுதித் தருகிறேன் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார், எனத் தெரிவித்தார். ஏற்றுமதி நிறுவனங்களில் நல்ல ஊதியம், வீடு, வாகனம் ஆகியவை வழங்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு அடுத்த நிலையில் பணியாற்றிய உயர் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த பலர் இப்போது வேலை இழந்து இதுபோல் பாதி ஊதியத்துக்கு வேலை செய்யத் தயார் என சிறு, நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்களை நாடி வருகின்றனர்.

அடுத்தடுத்த பாதிப்புகள்

ஏற்கெனவே தொழிலாளர் வேலை குறைந்து, வருமானம் குறைந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது அடுத்த கட்டமாக நிர்வாகப் பிரிவைச் சேர்ந்தவர்களும் வேலை இழப்புக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனினும் பின்னலாடைத் தொழிலின் உள்ளார்ந்த பாதிப்புகள் கடலுக்கடியில் ஏற்படும் சுனாமி போலத்தான் உள்ளது. திருப்பூரில் நிர்வாகப் பிரிவு அலுவலர்கள் வேலை இழப்பு அதிகமாக உள்ளது. வேலை இழக்கும் நிர்வாகப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது சிஐடியுவின் கோரிக்கை என்று சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் கூறினார். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, டிராபேக் குறைப்பு என அடுத்தடுத்து தாக்குதல், பின்னலாடை சிறு, குறு தொழில் முனைவோர் வெளியேற்றம், சார்புத் தொழில்கள் நலிவு, தொழிலாளர் வேலை இழப்பு, வருமான வீழ்ச்சி என அடுத்தடுத்து தொடர்ந்து பாதிப்புகளையும், நெருக்கடி யையும் சந்தித்து வரும் திருப்பூர் இப்போது மற்றுமொரு நெருக்கடி கட்டத்துக்குள் தள்ளப்பட்டுள்ளதை இப்போதைய நிலை உறுதிப்படுத்துகிறது.