tamilnadu

img

சென்னைக்கு ‘ரெட் அலர்ட்’ - வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் விளக்கம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதானால் மழைக்கு வாய்ப்பு உள்ளது, எனவேதான் ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: “கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்துள்ளது; அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த அக். 1 முதல் இன்று வரை பதிவான மழையின் அளவு 138 மி.மீ; இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 71 மி.மீ, இது இயல்பை விட 94% அதிகம்.
தென்மேற்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 320 கி.மீ தொலைவிலும், ஆந்திரப் பிரதேசம் நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 370 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது; தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுவைக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கக்கூடும்.
சென்னையில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால்தான் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் என்பதால் அனைத்து இடங்களிலும் 20 செ.மீ மழை பொழியும் என்பது கிடையாது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.