tamilnadu

img

நாளை பணிக்கு திரும்ப சாம்சங் தொழிலாளர்கள் முடிவு!

முத்தரப்பு பேச்சு வார்த்தையை ஏற்று நாளை முதல் பணிக்கு திரும்ப சாம்சங் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் 1500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தங்கள் மீது சாம்சங் நிறுவனம் நடத்தும் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவும், தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைக்காகவும் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு சிபிஎம், சிபிஐ, வி.சி.க, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தொழிலாளர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த அக்டோபர் 15 அன்று நடைபெற்ற முத்தரப்பு சமரச பேச்சு வார்த்தையின் அறிவுரை(ஒப்பந்தம்)யை ஏற்று நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கம் தரப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து விவாதிக்க சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க பேரவை கூட்டம் இன்று (அக்டோபர் 16) நடைபெற்றது. 
கூட்டத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தையின் அறிவுரை விபரங்கள் தொழிலாளர் முன் வைக்கப்பட்டது. அதன் மீது நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் அறிவுரை (ஒப்பந்தம்) ஏற்றுக் கொள்ளப்பட்டு போராட்டத்தை இன்றுடன் முடித்துக் கொண்டு  நாளை (அக்டோபர் 17) முதல் பணிக்கு திரும்புவது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.