tamilnadu

img

விகடன் இணைய முடக்கம் - இதுவரை நடந்தவை!

சென்னை,பிப்.18- விகடன் இணையதளம் முடக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை நடந்தவை தொடர்பான அறிக்கையை விகடன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி.10- சர்ச்சையை கிளப்பிய அந்த கார்ட்டூன் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியான விகடன் ப்ளஸ் இதழின் அட்டைப்படமாக வந்திருந்தது.
பிப்ரவரி.15- இதனைத் தொடர்ந்துதான் பிப்ரவரி 15 ஆம் தேதி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கும் அந்த கார்ட்டூன் ஆட்சேபனைக்குரியதாக இருப்பதாக புகார் கொடுத்தார். பா.ஜ.க ஆதரவாளவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபடும் திட்டத்தில் இருந்ததாகவும் தெரிகிறது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அண்ணாமலை புகார் கூறிய பிப்ரவரி 15 ஆம் தேதி அன்று மாலை 6 மணியிலிருந்து விகடன் இணையதளம் பல வாசகர்களுக்கும் வேலை செய்யவில்லை.
இதே சமயத்தில் Press Bureau of India வை சேர்ந்த அதிகாரிகள் விகடன் அலுவலகத்துக்கு விசாரணைக்காக வந்திருந்தனர். `விகடன் ப்ளஸ் இதழ் அச்சிலும் வெளியாகிறதா?' என்பது குறித்து விசாரித்துச் சென்றனர். விகடன் தரப்பில் அந்த விகடன் ப்ளஸ் இதழ் அச்சில் வெளியாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதெல்லாம் நடந்துகொண்டிருந்த சமயத்திலேயே, விகடன் இணையதளத்தில் வாசகர்களின் வருகை வெகுவாக குறைவதை விகடனின் தொழில்நுட்பக் குழு கண்டறிந்தது. விஷயத்தை டொமைன் சேவை வழங்கும் நிறுவனத்திடமும் இணையதள சேவை வழங்கும் நிறுவனத்திடமும் எடுத்து சென்றனர். ஆனாலும், பிரச்சனைக்கு என்ன காரணம் என்பதை பற்றி தெளிவான விடை கிடைக்கவில்லை.
பிப்ரவரி.16- விகடன் இணையதளம் முடக்கப்பட்டது பற்றி பலவிதமான கருத்துகளும் பேசப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி 16 ஆம் தேதி விகடன் தரப்பில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தையும் தேசிய தகவல் மையத்தையும் இணையதளம் முடக்கப்பட்டது சார்ந்து விளக்கம் கேட்டு தொடர்புகொள்ளப்பட்டது அன்று மாலை 5:59 மணியளவில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் விகடனுக்கு ஒரு செய்தி அனுப்பப்பட்டது. தகவல் தொடர்பு விதிகள் 2021 இன் படி அமைக்கப்பட்ட அவர்களின் துறைசார்ந்த கமிட்டி கூடி விகடன் இணையதளம் முடக்கப்பட்டது சம்பந்தமாக ஆய்வு செய்யப்போவதாக கூறினார்கள்.
பிப்ரவரி.17- விகடன் கேட்டுகொண்ட பிறகு, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் பிப்ரவரி 15 ஆம் தேதி விகடன் தளம் முடக்கப்பட்டதை அவர்களே உறுதி செய்தனர். விகடன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கமிட்டி முன் பதிலளிக்க பிப்ரவரி 20 ஆம் தேதி வரை கால அவகாசமும் கொடுத்தனர். ஆனாலும், அந்த துறைசார்ந்த கமிட்டியின் செயல் வரைமுறைகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி எதுவும் கூறவில்லை. அவை ரகசியமானவை எனவும் கூறப்பட்டது. மேலும், பிப்ரவரி 20 ஆம் தேதி அவசர நடவடிக்கையின் பேரில் எடுக்கப்பட்ட அந்த இணையதள முடக்கம் தொடரும் என்றும் கூறினர்.
இந்நிலையில் அடுத்ததாக சட்ட ரீதியான போராட்டத்துக்கு விகடன் தாயாராக இருப்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.