சென்னை:
ஜப்பானில் நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள சுபா வெங்கடேசன், தனலட்சுமிக்கு அரசு வேலை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் பங்கேற்க தமிழகத்திலிருந்து 5 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். ஆடவர் பிரிவில் ஆரோக்கியராஜ், நாகநாதன் பாண்டியனும் கலப்பு ஓட்டத்தில் தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன், ரேவதி வீரமணி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். திருச்சியை சேர்ந்த தனலட்சுமி, பயிற்சி செலவுகளை கூட சமாளிக்க முடியாத நிலையிலும் அயராது உழைத்து ஒலிம்பிக்கிற்கு சென்றுள்ளார். அதே திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுபா வெங்கடேசனும் மிகுந்த வறுமையிலும் ஒலிம்பிக்கில் கால் பதித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், மிகுந்த வறுமையிலும் போராடி ஒலிம்பிக் வரை சென்றுள்ள சுபா வெங்கடேசன் மற்றும் தனலட்சுமிக்கு அரசு வழங்க வேலை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் தாயகம் திரும்பிய உடன் அவர்களுக்கான அரசு பணிக்கான ஆணை வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்பட்டு, சர்வதேச அளவில் தமிழக வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.