tamilnadu

img

மருத்துவக் கழிவுகளை ஏரியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு

திருவள்ளூர், ஜூலை 27-  திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேட்டுசேரி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  இவர்களுக்கு குடிநீர் ஆதாரமாக பொத்தேரி உள்ளது.  இந்த ஏரியில் இருந்துதான் விவசாயத்திற்கும் ஏரியின் அருகாமை யில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு கிராமத்திற்கு குடிநீரும் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் ஏரியில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டிவிட்டு செல்வதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் ஏரியின் நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதுடன் குடிநீரும் பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளது கடந்த வாரம் 20-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் தண்ணீரை குடித்து இறந்து உள்ளது என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், வெள்ளியன்று  இரவும் மர்ம நபர்கள் ஏரியில் மருத்துவக் கழிவுகளை கொட்டிசென்றதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சனிக்கிழமையன்று (ஜூலை 27) காலை பூந்தமல்லி- அரக்கோணம் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் துணை ஆணையர் கங்காதரன் மற்றும் மப்பேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஏரியில் மருத்துவக் கழிவு கொட்டும் நபர்களை அடையாளம் கண்டு சட்டரீதியான உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஏரியில் உள்ள மருத்துவக் கழிவுகளை பார்வையிட்டார்.