சென்னை, மே 29-ஆசிரியர் பதவி உயர்வு பெயர்ப் பட்டியலிருந்து ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளானவர்கள் பெயர்கள் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில் 4000 பேருக்கு இளங்கலை ஆசிரியர்களிலிருந்து முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள தகுதியுள்ள ஆசிரியர்களின் பட்டியலை அனுப்ப அறிவுறுத்தப் பட்டுள்ளது.அந்தப் பட்டியலில் இடம் பெறும் ஆசிரியர்களின் தகுதிகள் மற்றும் யாரெல்லாம் அந்தப் பட்டியலில் இடம்பெறக் கூடாது என்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் பட்டியலில் இடம்பெற் றுள்ள ஆசிரியர்களின் மீது ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதா என ஆய்வு செய்து அவ்வாறு இருந்தால் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க ஏதுவாக அதுகுறித்த விவரங்களை நேரில் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த அடிப்படையில் ஜாக்டோ-ஜியோ போராட்டத் தில் பங்கேற்று ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று கூறப்படுகிறது.