சென்னை:
மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துச் சட்டமன்றக் கட்சிகளுடன் ஜூலை 12ஆம்தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுஎன்ற இடத்தில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சனை குறித்துத் தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண் டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும்,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அண்மையில் ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து, இந்தப் பிரச்சனையில் ஒன்றிய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றுகோரியுள்ளார்.
மேகதாது அணை அமைக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது எனக் கோரி கர்நாடக முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியபோது, இந்த அணைகட்டுவதால், தமிழ்நாடு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்றும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இதுஎதிராக அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி, இந்த அணை அமைந்திடதமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபடத் தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் கர்நாடக முதலமைச்சருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். இந்தச் சூழ்நிலையில், விவசாயிகளின் நலனைக் காப்பதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரின்ஒருமித்த எண்ணங்களைப் பிரதிபலிக் கும் வகையில், மேகதாது அணை பிரச்சனை குறித்து கலந்தாலோசிக்க, தமிழகத்திலுள்ள அனைத்துச் சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஜூலை 12 திங்கட்கிழமையன்று காலை 10. 30 மணியளவில், தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள் ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சட்டமன்றக் கட்சிகளுக்கும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.