tamilnadu

img

நீதிபதி சுவாமிநாதனின் அநீதியான பேச்சு!

தன் பேச்சுக்கிடையில் சட்டென்று குரலைக் கொஞ்சம் மாற்றி, கரகரப்பான குரலில் பேசி, திராவிட மாடல் என்று இருப்பது போல, திராவிடர் குரலும் இருக்கிறது அல்லவா என்று கேலி பேசி இருக்கிறார். அவர் பாஜகவின் மாவட்டச் செயலாளர் இல்லை, உயர் நீதிமன்ற நீதிபதி!

வீட்டுக்கு என்று சொல்லிவிட்டு, உடனே ஆத்துக்கு என்று சொல்ல வேண்டும் என ஆசைதான் என்று தன் சாதியை அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர், பார்ப்பனர் சங்கத் தலைவர் இல்லை.  உயர் நீதிமன்ற நீதிபதி! 

தமிழ் ஆர்வலர் என்று தன்னைச் சொல்லிக்கொண்ட ஒருவருக்கு, இரண்டு திருக்குறள் கூடச் சொல்லத் தெரியவில்லை என்று சொல்லித் தமிழ் ஆர்வலர்களை எல்லாம் கிண்டல் செய்திருப்பவரும், அதே உயர் நீதிமன்ற நீதிபதிதான்!

தமிழ் மீதும், திராவிட இயக்கத்தின் மீதும் இவ்வளவு வெளிப்படையாகத தன்னுடைய ஒவ்வாமையை வெளிப்படுத்தும் ஒருவர், இன்றும் உயர்நீதிமன்றத்தில் - சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் - நீதிபதியாக இருக்கின்றார். அவர் பெயர் ஜி ஆர் சுவாமிநாதன்!

நேற்று (02.04. 2023), சென்னை, தியாகராயர் நகர், வாணி மகாலில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில்தான்,  நீதிபதி சுவாமிநாதன் இப்படிப் பேசியிருக்கிறார். அந்த விழாவில் எச் ராஜா, ரங்கராஜ் பாண்டே ஆகியோரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்!

அந்த விழாவில் நீதிபதி கரகரப்பாகப் பேசிக் கேலி செய்த அந்த குரல், நாமெல்லாம் உயிராய் நேசிக்கும் அறிஞர் அண்ணாவின் குரல், தலைவர் கலைஞரின் குரல்! 50 ஆண்டுகளுக்கு முன்னால் என் போன்ற ஆயிரம் ஆயிரம் இளைஞர்களைத் தட்டி எழுப்பிய குரல், தமிழ் மொழியின் சிறப்பைத் தொட்டுக் காட்டிய குரல், ஆரியப் பார்ப்பனக் கொட்டத்தை வெட்டி வீழ்த்திய குரல்! எனவே அந்தக் குரல் மீது அடிப்படையில் ஒரு பார்ப்பனருக்குக் கடுமையான வன்மமும், கோபமும் இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய ஒரு நீதிபதியிடம் இருக்கலாமா?

தன் பேச்சில் இன்னொரு செய்தியையும் அவர் குறிப்பிடுகிறார். ஒரு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நிற்காமல் மேடையில் ஒருவர் அமர்ந்திருந்தாரே, அவர் -  அதாவது அந்தப் "பால பெரியவா " மோனத்தில் இருந்தாராம்! விசாரிக்காமலேயே நீதிபதி தீர்ப்பு உரைக்கிறார்! 

அதனை எதிர்த்து ராமேஸ்வரம் சங்கர மடத்தில், சீமான் கட்சியைச் சேர்ந்தவர்கள் ரகளை செய்ததாகவும், அந்த வழக்கு தன்னிடம் வந்ததாகவும் கூறும் நீதிபதி, இருவரையும் சமாதானமாகப் போய்விடும்படி சொன்னாராம். அதற்கு அந்த மடத்தின் மேனேஜர், "நாங்க எல்லாம் ஃபிரண்ட்ஸ்தானாக்கும்" என்று சொன்னாராம். அந்தக் குரலில் ஒரு வாஞ்சை இருந்ததாம். அது சரி, சங்கர மடத்திற்கும், நாக்பூர் தமிழர் கட்சிக்கும் இடையில் ஒரு வாஞ்சை இருக்கத்தானே செய்யும்! 

எல்லாவற்றையும் விட முதன்மையானது அவர் உரையின் இறுதிப் பகுதிதான். அது விவாதத்திற்கு உரியதாக ஆகலாம் என்பதை அவரே குறிப்பிடுகிறார்.  "It can be turned into slight controversy " என்று சொல்லிவிட்டு, அது குறித்துத் தனக்குக் கவலை இல்லை என்றும் கூறுகிறார்.

அந்த விவாதத்திற்கு உரிய செய்தி, இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது இருந்த  demographic profile மாறாமல் இருக்கும் வரைதான், அரசமைப்புச் சட்டம் அப்படியே இருக்கும் என்றும், அப்படி மாறாமல் இருப்பதற்குப் பாரதிய தர்மங்களை, சம்பிரதாயங்களை நாம் பின்பற்ற வேண்டும் என்றும் சொல்கிறார்! தான் நீதிபதி என்பதால்,  இதற்கு மேல் பேச முடியாது என்று வேறு குறிப்பிடுகிறார்! 

அவர் மறைமுகமாகச் சொல்லி முடித்திருக்கும் செய்தி என்ன என்று நமக்கு வெளிப்படையாகவே தெரிகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் உருவான காலத்தில் "பாரதீய தர்மம்" எனப்படும் வருணாசிரம தர்மத்தைப் பின்பற்றிய -  அதாவது பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்ட இந்துக்களே மக்கள் தொகையில் கூடுதலாக இருந்தனர்! இனியும் பிற மதத்தினர் எண்ணிக்கையில் இங்கு கூடிவிடாமல், பாரதிய தர்மத்தை ஏற்றுக் கொள்ளும் - அதாவது, பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வை ஏற்றுக் கொள்ளும் நிலை இருக்கும் வரையில்தான் இந்தச் சட்டம் செல்லுபடியாகும். இல்லையானால், வேறு ஒரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டி இருக்கும் என்றுதான் அவர் சொல்ல வருகிறார்!

அதாவது, நேக்கு, நோக்கு, ஆத்துக்கு என்று பேசும் அவாளை ஏற்றுக்கொள்ளும், பாரதிய சம்பிரதாயங்களை ஒப்புக்கொள்ளும் வரையில்தான், இங்கு ஜனநாயகம் இருக்கும் என்று ஒரு நீதிபதி வெளிப்படையாகக் சொல்கிறார்.

நம்முடைய ஒரே கேள்வி -  இப்படி அநீதியாகவும், ஒரு பக்கச் சார்புடனும், சிறுபான்மை மத மக்களுக்கு எதிராகவும் ஒரு பொது நிகழ்வில் பேசும் ஒருவர், நீதிபதியாகத் தொடர்வது, நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லதுதானா என்பது மட்டுமே!

 

-சுப.வீரபாண்டியன்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை