நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் பல மாதங்களாகக் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். தமிழக அரசு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் ஆளுநர் தரப்பு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, உடனடியாக 10 மசோதாக்களையும் தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
அந்த 10 மசோதாக்களையும் தமிழக அரசு கடந்த நவம்பர் 18ஆம் தேதி சிறப்புச் சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டி மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.
இரண்டாவது முறை மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் கட்டாயம் ஒப்புதல் தர வேண்டும். ஆனால், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர், அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்த தகவல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆளுநருக்கு எதிராகக் காட்டமாக சில கருத்துகளைத் தெரிவித்தது.
மேலும், மசோதாக்கள் தொடர்பாக முதலமைச்சர் - ஆளுநர் இடையேயான பிரச்சினையை இருவரும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.
மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்கக் கோரியிருந்தது.
உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
அதற்கு, புயல் நிவாரணப் பணிகள் மற்றும் மத்தியக் குழுவின் ஆய்வு நடைபெற்று வருவதால், அது முடிந்த பிறகு சந்திப்பதாக ஆளுநருக்கு முதலமைச்சர் பதில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆளுநர் இறங்கி வந்து அழைப்பு விடுத்துள்ளது அரசியல் வட்டாரங்களில் கவனிக்கத் தகுந்ததாக இருக்கிறது.