விழுப்புரம், ஆக. 21- விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு அந்த பகுதியைச் சுற்றியுள்ள அரசூர், பெரியசெவலை, ஏனாதிமங்கலம், ஆனத்தூர் சித்தலிங்கமடம், திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது விவசாயப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக நெல் மூட்டைக்கு 869 ரூபாய் என குறைந்த விலை நிர்ணயம் செய்து ஏலத்தில் எடுக்கப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை (ஆக. 20) நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்த பெரியசெவலை பகுதி விவசாயிகள், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை, திருக்கோவிலூர்உள்ளிட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நெல் மூட்டைக்கு ரூ.900 முதல் ரூ.1,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரிடம் விவசாயிகள் முறையிட்டபோது, அவர் முறையான பதிலைக் கூறாததுடன், இங்கு வழங்கப்படும் விலை இதுதான், விருப்பம் இருந்தால் நெல் மூட்டைகளை விற்பனை செய்யுங்கள் எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த பெரியசெவலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் திருவெண்ணைய்நல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நெல் மூட்டைகளை நெடுஞ்சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சியர் வேல்முருகன், காவல் துணைக் கண்காணிப்பாளர் வசந்தராஜ், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரிகளுடன் அதிகாரிகள் கூட்டு சேர்ந்துகொண்டு நெல் மூட்டைக்கு குறைந்த விலையை நிர்ணயம் செய்கின்றனர். மேலும், சில தரகர்கள் நெல் வியாபாரிகளை இங்கு வர விடாமல் தடுக்கின்றனர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், விற்பனைக்கூட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்தார். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.