சென்னை:
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ் ணன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அதிமுக சார்பில் போட்டியிட்ட நடிகர் சரத்குமார் தோல்வியடைந்தார். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்செந் தூரைச் சேர்ந்த வாக்காளர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.அந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவில் பல்வேறு தகவல்களை மறைத்து உள்ளதாகவும் அதில் வேட்புமனுவில் 16 குறைபாடுகள் உள்ளதாகவும், குறைபாடுகள் உள்ள வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சட்ட விரோதமானது எனவே அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.ராம்குமார் ஆதித்தன் இந்த தேர்தல் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும், காலதாமதமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து நீதிபதி கிருஷ்ணகுமார், புதனன்று உத்தரவிட்டார். அதில், அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று உத்தரவிட்டு தேர்தல் வழக்கை 4 வாரத் திற்கு தள்ளிவைத்தார்.