சென்னையில் பணிச்சுமை காரணமாக மருத்துவர் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் கண்ணன். 24 வயதுடைய இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் முழுவதும் இவர் இரவு பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையின் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தங்கும் விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் பலத்த காயம் அடைந்தவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணிச்சுமை காரணமாகவே மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.