பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையை பாதுகாத்திட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"கரூர் மாவட்டம், புகளூரில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (டி.என்.பி.எல்) 1979ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது நவீன இயந்திரங்கள் பயன்பாட்டினால் ஆண்டொன்றுக்கு 4,40,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான உற்பத்தியை இந்த ஆலை செய்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள கரும்புச் சக்கை அடிப்படையிலான காகித ஆலை உற்பத்தி நிறுவனங்களில் டி.என்.பி.எல். நிறுவனம் முன்னணி இடத்தை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த காகித ஆலையிலிருந்து உருவாகும் திடக் கழிவுகளான சுண்ணாம்பு, கசடு மற்றும் சாம்பல் ஆகியவற்றை பயன்படுத்தி 2013ம் ஆண்டு சிமெண்ட் ஆலை தொடங்கப்பட்டு இதர சிமெண்ட் நிறுவனங்களுக்கு சவால் விடக்கூடிய முறையில் ஒரு நாளைக்கு 900 டன் உயர்தர சிமெண்ட் உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது.
இதன் விரிவாக்கத்தின் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம் மொண்டிப்பட்டியில் 2015ம் ஆண்டு 874 ஏக்கர் பரப்பளவில் டி.என்.பி.எல். அலகு 2 துவங்கப்பட்டு தற்போது ஆண்டுக்கு 2,00,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான உயர்தர காகித அட்டை உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. இவையனைத்தும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் தயாரிக்கப்படுகிறது. இவை தவிர கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இந்நிறுவனத்தின் சார்பாக காற்றாலைகள் நிறுவப்பட்டு 35.5 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் கல்வி, மருத்துவம், வேளாண்மை உள்ளிட்டு பல வகைகளில் மக்களுக்கு உதவிகளையும், சேவைகளையும் புரிந்து வருகிறது.
இந்த ஆலைகளில் நிரந்தர பணியாளர்களாக 3000 பேரும், தினசரி ஒப்பந்த பணியாளர்களாக 5000த்திற்கும் மேற்பட்டோரும் பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்ததாரர்கள், மூலப்பொருட்களை விநியோகம் செய்பவர்கள், விற்பனையாளர்கள் என 20,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலனடைந்து வருகின்றனர்.
இந்நிறுவனம் 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக லாபமீட்டி வருடந்தோறும் தமிழக அரசிற்கு ஈவுத்தொகையை செலுத்தக் கூடிய நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. சமீப காலமாக மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரி உயர்வு, தெற்காசிய நாடுகளிலிருந்து மலிவு விலையில் தங்கு தடையற்ற காகித இறக்குமதி ஆகியவற்றின் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள காகித நிறுவனங்கள் சந்தை போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. அதில் டி.என்.பி.எல். நிறுவனமும் ஒன்று. ஒரு டன் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஆலையின் காகிதம் தற்போது சந்தைப்போட்டியை சமாளிக்க முடியாமல் 64 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் உற்பத்தி செலவினை கூட ஈடு செய்ய முடியாமல் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இதே நிலை நீடிக்குமானால், இந்நிறுவனத்தை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட வாய்ப்புண்டு.
எனவே, காகித உற்பத்திக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை குறைப்பதற்கும், தங்கு தடையின்றி மலிவு விலையில் தெற்காசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காகிதங்களை கட்டுப்படுத்துவதற்கும் ஒன்றிய அரசு முன்வர வேண்டும். மேலும், டி.என்.பி.எல். நிறுவனத்தை மேம்படுத்தவும், நவீன கட்டமைப்புகளை பலப்படுத்துவதற்கும் இத்துறையின் சார்பில் உரிய கவனத்தை செலுத்தி தமிழக அரசின் பாரம்பரிய பொதுத்துறை நிறுவனமான டி.என்.பி.எல் நிறுவனத்தையும், அதில் பணிபுரியும் தொழிலாளர்களையும், இத்தொழிலை நம்பி வாழும் மக்களையும் பாதுகாத்திட வேண்டுமாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.