கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் பயின்று வந்த 8ஆம் வகுப்பு சிறுமியை அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் 3 பேர் வெகுநாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும், நடந்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளதும் மனதை பதைபதைக்க வைக்கிறது. இந்த படுமோசமான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் இதுபோன்று வேறு கூட்டு பாலியல் வல்லுறவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து தீர விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும், குற்றவாளிகள் மூன்று பேரும் தப்பித்துவிடாமல் போக்சோ சட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ள வழக்கை துரிதப்படுத்தி காலம் தாழ்த்தாமல் உரிய தண்டனை பெற்றுத்தரவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மாணவியின் பெற்றோர்கள் கூலித் தொழிலாளர்கள் என்பதால் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், மாணவிக்கு உரிய கவுன்சிலிங் அளித்து அவர் தொடர்ந்து பள்ளி படிப்பை தொடர்வதற்கும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு என்.சி.சி. முகாம் என்ற பெயரில் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. தற்போது ஆசிரியர்கள் 3 பேர் வெகுநாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிவந்துள்ளது. எனவே, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.