கடலூர், ஜூன் 30- டெல்டா பகுதியை பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் வலியுறுத்தி யது. காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கும் நோக்குடன் பல்வேறு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள் இணைந்து காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த அமைப்பின் கடலூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், காவிரி படுகையை முற்றிலும் அழிக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் செயல்படுகின்றன. ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நிலக்கரி உள்ளிட்டவற்றை எடுப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், நில வளம், நீர்வளம் அனைத்தும் பாதிக்கப்படும். ஒரு கோடிக்கும் அதிகமான காவிரி டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, காவிரி படுகையை பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறி வித்ததை ரத்து செய்து, பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதனை சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரச்சனைக்கு நிர்ந்தரத் தீர்வு ஏற்படும் வரை இந்த கூட்டியக்கம் ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்தி செயல்படுவது. ஜூலை 9-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகதை நோக்கி விவசாயிகள், பொதுமக்களை திரட்டி பேரணியாகச் செல்வது. இதற்காக, ஜூலை 1- ஆம் தேதி முதல் விழிப்புணர்வு பிரசாரம் செய்வது. ஒவ்வொரு ஒன்றியம், நகரங்களில் ஒருநாள் தெருமுனை பிரச்சாரம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்ப ட்டது. கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணி திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, கிள்ளை ரவீந்திரன், காங்கிரஸ் அகில இந்திய கமிட்டி உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், வி.எம்.சேகர், விசிக மாநில அமைப்புச் செயலர் தி.ச.திருமார்பன், மதிமுக நிர்வாகி கே.நரசிம்மன், விவசாய சங்கச் செய லர் கார்மாங்குடி எஸ்.வெங்கடேசன், மாவட்டச் செயலர் த.ஆனந்த், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலர் எஸ்.பிரகாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.