tamilnadu

img

அடுத்த வாரம் முதல் பொங்கல் பரிசு கிடைக்கும்

சென்னை,டிச.15- தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் அடுத்த வாரம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்புத் துண்டு மற்றும் ரொக்கம் 1000 ரூபாய் ஆகியவற்றை இந்த ஆண்டு முன்கூட்டியே வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படு வது வழக்கம். இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் இந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால் பொங்கல் பரிசுத் தொகுப்பு  திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 29 ஆம் தேதியே தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 2 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு தேவை யான பொங்கல்  பரிசுத் தொகுப்புகளை கொள்முதல் செய்ய அரசு தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தது. அதன்படி நியாய விலைக் கடைகளுக்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவைகளை பாக்கெட்டு போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் வருகிற செவ்வாய்க்கிழமைக்குள் முடிந்துவிடும். அதேபோல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப்பணம் ரூ.1000-த்தை இரண்டு 500 ரூபாய் தாள்கள் வீதம் வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் தயார் நிலையில் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. வருகிற புதன்கிழமை யில் இருந்து ஒவ்வொரு நியாயவிலைக் கடை களுக்கும் இவை அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதனால் வருகிற 20 ஆம் தேதி வழங்க அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே அனைத்து அட்டைதாரர்களுக்கும் கொடுத்து முடித்துவிட ஏற்பாடு நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.