ஆஸ்திரேலியாவில் இந்திய விஞ்ஞானி தலைமையிலான குழு, கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள உகான் நகரில் இருந்து கரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ், முதலில் வவ்வாலில் இருந்து பரவியதாகவும், பின்னர் பாம்புகளில் இருந்து பரவியதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது, எறும்பு திண்ணிகள் கரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் வைரஸ் தொற்று காரணமாக பலியானோர் எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 27க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது.
இந்த கரோனா வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகிறது. இதில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளில் இருந்து புதிய கரோனா வைரஸை தனியே பிரித்தெடுப்பதில் ஆஸ்திரேலியாவின் டோஹர்ட்டி இன்ஸ்டியூட் கடந்த வாரம் வெற்றிபெற்றது. இதை அடுத்து, ஆஸ்திரேலிய ஆராய்ச்சி நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்.ஓ., கரோனா வைரஸை ஆய்வகத்தில் வளர்த்தெடுப்பதில் வெற்றி கண்டுள்ளது. இந்த ஆய்வுக்குழுவிற்கு தலைமை தாங்கும் விஞ்ஞானி எஸ்.எஸ்.வாசன், இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் டெங்கு, சிக்குன் குனியா, ஜிகா வைரஸ் தொடர்பான ஆய்வுகளிலும் பங்கெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.