உலகைக் காத்தது சோவியத் செஞ்சேனையே!
என்றென்றும் இந்த உண்மையை உரத்து முழங்குவோம் ரஷ்ய ஜனாதிபதி புடின் முழக்கம்
மாஸ்கோ, ஜுன் 24- இப்பூவுலகை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கிவிடா மல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனையே என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பெருமிதத்துடன் குறிப்பிட் டார். சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தை யும் சாதனையையும் படைத்திருக்காவிட்டால் உலகின் எதிர்காலம் என்ன ஆகியிருக்கும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை என்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் சோவியத் மக்கள் ஆற்றிய அளப்பரிய பங்கும் அர்ப்பணிப்பும் அளவிட முடியாத தியாகமும் உலக வரலாற்றில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் விளாடிமிர் புடின் குறிப்பிட்டார். 14ஆயிரம் ரஷ்ய துருப்புக்கள், 200க்கும் மேற்பட்ட அதிநவீன ஆயுத தளவாடங்கள், இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவத் தளவாடங்கள், 75 அதிநவீன ராணுவ விமானங்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான ராணுவ அணி வகுப்பு மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில், ஜுன் 24 புத னன்று, நாஜிச ஜெர்மனியின் கொடிய சர்வாதிகாரி ஹிட்லரின் படைகளை 1941-1945 இரண்டாம் உலகப்போரின் இறுதி யில், மாபெரும் தேசபக்த யுத்தத்தில் மகத்தான சோவியத் ஒன்றியத்தின் செஞ்சேனை வெற்றிகொண்டு பாசிசத்தை வீழ்த்தியதன் 75ஆம் ஆண்டு நினைவுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
ரஷ்யப் படைகளோடு இந்தியா - சீனா உள்ளிட்ட சகோதர நாடுகளின் ராணுவத்தினரும், இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரை எதிர்த்துப் போரிட்ட நேச நாடுகளின் படையினரும் இந்த அணிவகுப்பில் அடையாளப்பூர்வ மாகவும் கம்பீரமாகவும் பங்கேற்றனர். இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அணிவகுப்பின் முகப்பில் சோவியத் ஒன்றியத்தின் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை பறைசாற்றும் மகத்தான செங்கொடி பட்டொளி வீசிப் பறக்க, பிரியோபர ஜென்ஸ்கி படைப்பிரிவு கம்பீரத்துடன் ஏந்தி வந்தது. இந்தக் கொடி, 1945ஆம் ஆண்டு போரின் நிறைவில் சோவியத் செஞ்சேனையின் 150வது இட்ரிட்சா படைப்பிரிவின் வீரர்களால் ஜெர்மனியின் பெர்லின் மாநகரில் ரீச்ஸ்டாக் கோட்டையில் ஏற்றப்பட்ட பெருமைக்குரிய கொடியாகும். பின்னர் இக்கொடி மாஸ்கோவுக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த மாபெரும் அணிவகுப்பை ரஷ்ய, ஜனாதிபதி விளாடி மிர் புடின் பெலாரஷ்யா ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகா சென்கோ, போஸ்னியா மற்றும் ஹெர்ஜிகோவினியா ஜனாதி பதியின் செர்பியத் தூதர் மிலோரார்டு, கஜகஸ்தான் ஜனாதி பதி ஹாசிம்தொகாயவ், கிர்கிஸ்தான் ஜனாதிபதி சூரோன்பாய் ஜீன், மால்டோவியா ஜனாதிபதி இகோர் தோடன், செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் யுசிக், தஜிகிஸ்தான் ஜனாதிபதி யிமோமாலி ரஹ்மான், உஸ் பெகிஸ்தான் ஜனாதிபதி சவுகத் மிர்ஜியோயவ் உள்ளிட்ட முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஹிட்லரின் படைகளை சோவியத் செஞ்சேனை வீழ்த்தி யதன் 75ஆம் ஆண்டு விழாவை இன்னும் பிரம்மாண்டமான முறையில் மே 9 அன்று நடத்துவது என்று புடின் அரசு முடிவு செய்து அறிவித்திருந்தது. ஆனால் உலகம் முழுவதும் கோவிட் 19 தொற்று பரவிய நிலையில், ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உள்ளிட்ட நிலைமைகள் ஏற்பட்டன. இந்நிலையில் மக்களின் பாதுகாப்பை கருதி, இந்த அணிவகுப்பை ரஷ்ய அரசு ஒத்திவைத்தது. இதைத்தொடர்ந்து மே 26 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு விதிகளுடன், செஞ்சதுக்கத்தில் இந்த அணி வகுப்பை ஜுன் 24 அன்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக விழாவின் துவக்கத்தில் தலைமையேற்று உரையாற்றுகையில் விளக்கிய ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், 1945ஆம் ஆண்டு சோவியத் செஞ்சேனை, பாசிச ஹிட்லரின் படைகளை வீழ்த்திய பிறகு, மே 9 அன்றும் அதைத் தொடர்ந்தும் பேரணிகளும் அணி வகுப்புகளும் நடைபெற்ற போதும், ஜுன் 24 அன்றுதான் அதிகாரப்பூர்வமாக மிகப்பிரம்மாண்டமான - கம்பீரமான அணிவகுப்பு மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் நடைபெற்றது; அந்த அணிவகுப்பில்தான் மாஸ்கோவையும் லெனின் கிராடையும், ஸ்டாலின்கிராடையும் பாதுகாத்த வீரர்கள் நேரடியாக பங்கேற்றார்கள்; அச்சமயம் இந்த செஞ் சதுக்கம் உலகின் மகத்தான விடுதலைக்கு அறைகூவல் விடுத்தது” என்று குறிப்பிட்டார்.
விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சோவியத் செஞ்சேனையின் அர்ப்பணிப்பையும் சோவியத் மக்களின் தியாகத்தையும் வெகுவாக புகழ்ந்துரைத்தார். சோவியத் செஞ்சேனையின் வீரர்கள் தன்னலம் கருதாமல் தங்களது உயிரை அர்ப்பணித்து பாசிசத்தை வீழ்த்தியதன் விளைவாகத்தான் ஐரோப்பா மீண்டும் அடிமையாக்கப்பட முடியாத அளவிற்கு சுதந்திரத்தை எட்டியது என்று புடின் கூறினார்.
“ஆயிரம் ஆயிரம் செஞ்சேனை வீரர்கள் தங்களது நாட்டை மட்டுமல்ல, நாஜிசத்தின் பிடியிலிருந்து அனைத்து நாடுகளையும் காப்பது தங்களது கடமை என்று கருதினார்கள்; 1945 இறுதிக்கட்டத்தில் நாசிச ஜெர்மனியின் ராணுவ துருப்புக்களில் 80சதவீதத்திற்கும் அதிகமாகவும், அவர்களால் கைப்பற்றப்பட்டிருந்த நாடுகளின் படைகளில் பெரும்பாலானவையும் ஒட்டுமொத்தமாக சோவியத் சோசலிச ரஷ்ய குடியரசை அழிக்கும் நோக்கத்துடன் ஈவிரக்கமற்ற போர்வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்; ஆனால் அத்தனை படைகளும் சோவியத் மக்களின் மகத்தான ஒற்றுமையின் முன்பு சக்தியிழந்து போயின” என்றும் புடின் குறிப்பிட்டார்.
“அவர்கள் எங்கள் மக்கள்; இப்பூலகை பெரும் தீமை யிலிருந்து பாதுகாத்த அவர்கள் எங்கள் மக்கள்; கொடிய சர்வாதிகாரத்தினை வீழ்த்தியவர்கள் எங்கள் மக்கள்” என்று புடின் பெருமிதத்துடன் முழங்கினார்.
“எதிரிப் படைகளின் 600 பிரிவுகளை சோவியத் செஞ் சேனையும், சோவியத் மக்களும் வீழ்த்தினார்கள்; எதிரி களின் விமானப் படைகள், டாங்குகள், தானியங்கி துப்பாக்கி கள் உள்ளிட்ட தளவாடங்களின் 75சதவீதத்தை நொறுங்கச் செய்தார்கள்; அவர்கள் செய்தது இவ்வுலகில் இதுவரை யாருமே செய்துகாட்டியிராத மாபெரும் வீரம், மகத்தான தியாகம். இதுதான் இரண்டாம் உலகப்போரின் பிரதான மான, நேர்மையான, பாரபட்சமற்ற உண்மை ஆகும். இந்த உண்மையை உரத்துச் சொல்வோம், இந்த உண்மை யை பாதுகாப்போம், இந்த உண்மையை நமது குழந்தை களிடமும் பேரக்குழந்தைகளிடமும், கொள்ளுப்பேரக் குழந்தைகளிடமும் வாழையடி வாழையாக எடுத்துச் செல்வோம்; மீண்டும் மீண்டும் முழங்குவோம் சோவியத் மக்களே நாஜிசத்தை நசுக்கினார்கள்; சோவியத் செஞ்சேனையே இப்பூலகை பாதுகாத்தது; சோவியத் ஒன்றியமே உலகம் முழுவதும் இருக்கிற எண்ணற்ற தேசிய இனங்களின் கோடானுகோடி மக்களின் விடுதலைக்கு வித்திட்டது” என்று ஜனாதிபதி புடின் முழக்கமிட்டார்.
(இடார்டாஸ்)