ஆம்பூர், ஆக.10- வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வெளியான முகநூல் பதிவைத் தொடர்ந்து அங்கு பொது இடங்களில் வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். கிருஷ்ணகுமார் என்ற பெயரிலுள்ள முகநூல் பக்கத்தில் ஆம்பூரில் வெடிகுண்டு வைத்திருப்பது போன்ற மிரட்டல் தொனியிலான பதிவு காணப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய்களின் உதவியுடன் ஆம்பூரில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அது புரளி எனத் தெரியவந்த நிலையில், அந்த முகநூல் கணக்கு போலியானது என்பதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். அதனை பதிவேற்றிய நபர் குறித்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் விசாரித்து வருகிறார்கள்.