tamilnadu

திண்டிவனம் கல்குவாரி குட்டையில் குளித்த 4 பேர் நீரில் மூழ்கி பலி  

திண்டிவனம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பா (60).  இவரது மகன் சுவாமிநாதனுக்கு வினோதினி(14), ஷாலினி(10), கிருஷ்ணன்(8) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். இவர்கள் மூவருக்கும் விடுமுறை காரணமாக சிறுவர்கள் 3 பேரும் தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளனர்.  

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் துணி துவைக்க தனது பேரக்குழந்தைகளுடன் பாட்டி புஷ்பா சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, குளிப்பதற்கு குட்டையில் இறங்கிய நால்வரும் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளனர். இதில் புஷ்பா, வினோதினி, ஷாலினி, கிருஷ்ணா ஆகிய 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.