கீவ்:
உக்ரைனில் ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
உக்ரைன் நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள கார்கிவ்விமானப்படை பல்கலைக்கழகத்தில் விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான “அன்டோனோவ் அன் 26” ரக விமானம் சுஹூவ் நகரில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானப்படை வீரர்கள் 20 பேரும், விமானி உட்பட விமான ஊழியர்கள் 7 பேரும் பயணம் செய்தனர்.
புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் விமானத்தின் 2 இன்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்தது. இதனை அறிந்த விமானி உடனடியாக விமானத்தை ராணுவ விமானநிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நெடுஞ்சாலையில் தரையிறக்க முயற்சித்தார்.ஆனால் அதற்குள் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையோரம் உள்ள புதரில் விழுந்து, தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். விமானப்படை வீரர்கள் 2 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.