tamilnadu

பழமையான தமிழர் நாகரீகத்தை ஆவணப்படுத்துவதில் ஒன்றிய அரசு பாரபட்சம்

பழமையான தமிழர் நாகரீகத்தை  ஆவணப்படுத்துவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் 

ஜவாஹிருல்லா கண்டனம்

பாபநாசம், ஜுன் 16-  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், கீழடியில் 2015-16 ஆம் ஆண்டில் முதல் கட்ட ஆய்வு அறிக்கையும், 2023 இல் இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையும் ஒன்றிய அரசிடம் வழங்கப்பட்டது.  அந்த அறிக்கைகளை வெளியிடுவதில் ஏன் தாமதம் என்று மக்களவையில்  கடந்த 2024 டிசம்பர் மாதம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்குப் பதிலளித்துப் பேசிய ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அறிக்கையை வெளியிடுவதற்கு முன் நிபுணர்களைக் கொண்டு, முழுமையாக ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது. முழுமையான ஆய்வுக்குப் பிறகே அரசு  விதிகளின்படி அகழாய்வு அறிக்கையை வெளியிட முடியும் என்றார்.  தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசின் ஆய்வு முடிவுகள் இன்னும் வெளி வராதது ஏமாற்றம்  அளிக்கிறது. கீழடியில் நடந்த தொல்லியல் அகழாய்வு குறித்த அறிக்கையை மறு சீரமைத்து சமர்ப்பிக்குமாறு, அப்பணியில் ஈடுபட்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (ASI)  உத்தரவிட்டது.  அவரும் தனது  அறிக்கையை ஆய்வு எல்லைக்குள்  சரியாகச்  செய்திருப்பதால் திருத்தம் செய்யத் தேவையில்லை என்று பதில் அளித்துள்ளார்.  மதுரை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தபோது, ஒன்பது மாதங்களில் தனது அறிக்கையை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துவிட்டு 14 மாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்னும் தாமதப்படுத்துவது ஏன்?  சமீபத்தில், ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வு அறிக்கை, அறிவியல் பூர்வமான தொழில்நுட்ப ரீதியில்  இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கு அங்கீகாரம் வழங்க ஏராளமான  நடைமுறைகள் உள்ளன. இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன என்று கூறியிருக்கிறார்.  தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றிற்கு ஒன்றிய அரசு செய்யும் மாபெரும் துரோகமாகும். உலகின் மிகப் பழமையான தமிழர் நாகரீகத்தை ஆவணப் படுத்துவதில் ஒன்றிய அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது.  பாஜக அரசின் ஒற்றை கலாச்சாரக் கொள்கைக்கு எதிராக கீழடி ஆய்வு முடிவுகள் அமைந்திருப்பதால், இதனை ஒடுக்க அது நினைக்கிறது. தாமதம் இன்றி கீழடி அறிக்கையை வெளியிடவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.