tamilnadu

img

மூன்றுநாள் தொடர்மழை, மூழ்கிய நெற்பயிர்கள் நனையும் நெல்குவியல்கள்; கலங்கும் விவசாயிகள்

நாகப்பட்டினம், பிப். 12- நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் கனமழையால் அறுவடை செய்ய தயாராக இருந்த நெல்மணிகள் மழைநீரில்  மூழ்கின. அறுவடை செய்த நெல் களத்தில் நனைந்து போய்க்கிடக்கிறது. இதனால் கடினமாக உழைத்து விவசாயம் செய்த விவசாயிகள் கண்ணீர் சிந்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சைமண்டலத்தின் கடைமடைப் பகுதி நாகப்பட்டினம் மாவட்டம்.கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மணிகள் முற்றிலும் மழை நீரில் மூழ்கி உள்ளன. மூன்று தினங்களாக  கனமழை பெய்து வருவதால் மொத்த விவசாய நிலப்பகுதியும் மழை நீரில் மூழ்கி உள்ளது.

நெற்பயிர்கள் பசுமை நிறம் மாறி முற்றிய நெற்கதிர்களாக எங்கு பார்த்தாலும் பொன் நிறமாக காட்சி அளித்தது. இந்நேரத்தில் மழை பெய்வது அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் விவசாய பெருங்குடி மக்கள் செய்வது அறியாது திகைத்து நிற்கின்றனர். விளைந்து நெற்கதிர்கள்மழை நீரில் சாய்ந்து நெல்மணிகள் தண்ணீரில் உதிர்ந்த வண்ணம் உள்ளது. ஒருசில விவசாயிகள் ஏற்கனவே இரண்டு முறை விவசாயம் செய்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போதிலும் மூன்றாவது முறையாக நம்பிக்கையோடு விவசாயம் செய்து நெற்பயிர்கள் முற்றிய நிலையில் மழை பெய்வது மிகவும் வருத்தத்தை உண்டாகியுள்ளது. மழை துவங்குவதற்கு  ஒரு நாளுக்கு முன்பு அறுவடை செய்யப்பட்ட  நெல்லின் வைக்கோல் முழுவதும் தண்ணீரில் நனைந்து காணப்படுகிறது. அறுவடை செய்து  கொண்டு வந்து களத்தில் உலர்த்துவதற்காக குவிக்கப்பட்ட  நெல்மணிகள்,குவியல் குவியலாக ஆங்காங்கே தார்ப்பாய் போட்டு மூடிக் கிடக்கிறது.இன்னும் மழையின் தாக்கம் குறைந்தபாடில்லை.

அறுக்க வேண்டிய  நெல் நிலத்திலும், அறுவடை செய்யப்பட்ட நெல் களத்திலும் கிடக்க,விற்பனைக்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல் மூட்டைகளோ பாதுகாப்பில்லாமல் மழையில் நனைந்தபடி கிடக்கின்றன.மழையில் நனைந்து மக்கிய வைக்கோலை மாடுகள் தின்பது சிரமம் என்கிறார் ஒரு விவசாயி.இன்னும் ஒரு வருட காலத்திற்கு கால்நடைகளுக்கு தேவையான வைக்கோலுக்கு எங்கே போவது என்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள் விவசாய பெருமக்கள். “விளைந்த நெல் வீடு வந்து சேருமா, வயலோடு போகுமா” என்கிற பதற்றத்தோடும் கவலையோடும் மழையில் நனைந்தபடி வயலை நோக்கி பார்த்து விட்டு வீட்டில் வந்து முடங்கி கிடக்கும் விவசாயிகளின் வேதனைகளை  வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஆதி.உதயக்குமார், நாகப்பட்டினம்