ஆரூர் புதியவன்
அந்தப் பாம்புகள்
மறைந்து வாழ்பவை அல்ல
பகிரங்கமாய் உலவுபவை
பதவி நாற்காலிகளில்
பவிசாய் அமர்ந்தவை.
புற்றுகளில் வாழ்வதில்லை
அதிகார பீடங்களை அவை
தமது புற்றுகளாக மாற்றிவிட்டன.
இவற்றிற்கு காதுகள் உண்டு
அவை
மோடி மஸ்தான்களின்
மரணமகுடியை மட்டுமே கேட்கும்
முன்பு அவை
மனிதர்களாக இருந்தன
அரை டவுசர்களை அணிந்து
ஆயுதங்களைத் தரித்து
கிஞ்சிற்றும் உண்மையற்ற
வஞ்சக உரையை
நெஞ்சினில் பதித்து பதித்து
அவை
பாம்புகளாய் மாறின.
கடிக்கிற பாம்புகளிடம் கூட
தற்காப்பு எனும் ஒரு
காரணம் உண்டு
இந்தப் பாம்புகளோ
தேசத்தின் மக்களை
தினந்தோறும் மாய்க்கும்
தேசபக்தியின் பெயரால்..
பாம்பாகவே
பிறந்தமைக்கு
பல் மட்டுமே ஆயுதம்
பாம்பாக மாறி விட்ட
இந்த பயங்கரங்களுக்கு
எல்லாமே ஆயுதம்
குளிப்பதற்கு
முஸ்லிம் ரத்தம்
குடிப்பதற்கு
கிறிஸ்துவ ரத்தம்
துணிகளை துவைக்க
தலித் ரத்தம்
பாத்திரம் கழுவ
கம்யூனிஸ்ட் ரத்தம்
இந்தப் பாம்புகள்
ஞானிகள் உடுத்திய
காவியால்
உடலை மறைத்துக் கொள்ளும்.
தாமரைப் பூவால்
முகத்தை
மறைத்துக் கொள்ளும்.
ஏமாந்தோர் எல்லோரையும்
எப்போதும் கொல்லும்.
அரிய வகை பாம்பு இனத்தின்
பாதுகாப்புக்காக
அடிமையாக்கப்பட்ட
இந்த பாம்புகள்
தாங்கள் அடிமைகள்
என்பதையே அறியாதவை
எதிரிகளாய்
பாம்புகள்
யாரை கருதுகின்றனவோ
அவர்களை
தானே கொல்கின்றன.
நம்மை அவை
தீண்டுவதில்லையே
நாமும் குல்லாவும்
சிலுவையும் அணிவோர் இல்லையே
என்பது
பெரும்பான்மையின
அப்பாவி ஜீவன்களின்
நம்பிக்கை
அந்த ஜீவன்களின்
ஆழ்ந்த மௌனத்திற்கு
அதுவே காரணம்
அந்த நம்பிக்கையும்
மௌனமும்
அதிபயங்கர பாம்புகளை விடவும்
அபாயமானவை
மத்திய பிரதேசம்
நீமுச் மாவட்டத்தில்
பன்வாரிலால் ஜெயின் என்ற
முதிய மாற்றுத்திறனாளியை
முகமது என நினைத்து
ஒரு பாம்பு
கடித்து குதறி
உயிர் குடித்தது
மௌன நம்பிக்கை கொண்ட
மகாஜனங்களே
அந்தப் பாம்புகள்
யாரையும் கடிக்கும்
எனவே......