tamilnadu

img

நகர்ப்புற உள்ளாட்சிகள் அனைத்துக்கும் நூறு நாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்துக!

சென்னை, மார்ச் 22- 2022-23 நிதி நிலை அறிக்கையின் மீதான பொது விவாதத்தில் சிபிஎம் உறுப்பினர் எம்.சின்னத்துரை பேசியதாவது: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலைகளை கட்டுப்படுத்தியும், கடுமையான நெருக்கடிகளை கடந்தும், பெரும் மழை வெள்ளத்திலிருந்தும் மக்களை பாதுகாத்த தமிழக அரசிற்கும், தமிழக முதலமைச்சருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் உலகின் மிகத் தொன்மையான நாகரீகங்களிலும் ஒன்றானதும் என தாமிரபரணி படுகை ஆய்வின் மூலம் உலகறியச் செய்தது தமிழ் சமூகத்திற்கு கிடைத்துள்ள சான்றாகும்.

வஞ்சிக்கும் ஒன்றிய அரசு

நமது நாட்டின் பன்முகப் பண்பாட்டை பாசிச சக்திகள் அழிக்க முயலும் போதும், நமது நாட்டின் கூட்டாட்சி மாண்பினையும், மதச்சார்பின்மையையும், மக்கள் ஒற்றுமையையும் பாதுகாத்திட தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கரம் கோர்த்து நிற்போம். ஜி.எஸ்.டி., வரி பங்கீடு, பேரிடர் மேலாண்மை நிதி போன்றவைகளை ஒன்றிய அரசு தமிழகத்திற்கு முழுமையாக ஒதுக்க மறுத்து வஞ்சித்து வருகிறது. இதனை கேட்டுப் பெற  தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக நிற்கும்.

வரவேற்பு

கடுமையான நிதி நெருக்கடிகள் நிறைந்துள்ள சூழலிலும் அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட 1800 புதிய வகுப்பறைகள் கட்டுவது, அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு இடைநிற்றலை தடுத்திட மாதந்தோறும் ரூ. 1000 நிதி உதவி,   இளைஞர்களுக்கான விளையாட்டுத் திறனை மேம்படுத்திட, மாணவர்களுக்கான இலவச பேருந்து கட்டணம்,  மகளிருக்கான இலவச பேருந்து பயணம்,  மின்வாரிய இழப்பீட்டை சீர் செய்திட ரூ. 13,108 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கதாகும். கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, சிறு-குறு தொழில் முன்னேற்றம் காணவும்,  பயிர்க் கடன்கள், நகைக் கடன்கள், சுய உதவிக்குழு கடன் தள்ளுபடிக்காக 4131 கோடி ஒதுக்கீடுகள் என்பது வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வளிப்பதாகும். 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் தரமான கல்வியும், மருத்துவமும், அனைவருக்கும் இலவசமாக கிடைத்திட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் ஆண்டுக்கு, ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளதை கணக்கில் கொண்டு - தமிழக அரசுத்துறையில் காலியாக உள்ள 3.5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக நிரப்பிட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி வழங்கப்பட்டது. குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதனை உடனடியாக வழங்கிட வேண்டும்.

அடிப்படை ஊதிய நியமனத்தில் நீண்ட காலம் பணியாற்றும் 20 ஆயிரம்  இடைநிலை ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களை அரசுப்பணியாளர்களாக பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். மனைப்பட்டா கிராமப்புறம் - நகர்ப்புறங்களில் பல்லாண்டு காலமாக உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு அடிமனைப் பட்டா வழங்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளையும், தீர்ப்புகளையும் காரணம் காட்டி வீடுகள் இடிக்கப்படும் என்ற அறிவிப்பால் துயரமடைந்துள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை பாதுகாத்திட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். நீதிமன்றங்களில் வழக்கு இருக்கும் போது தீர்ப்புகள் சில வந்த போதும் இம்மாமன்றத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். எனவே, கோவில் நிலங்களைப் பயன்படுத்தி வரும் உள்ள ஏழைகளையும், வசதி படைத்தவர்களையும் சமப்படுத்தி பார்க்காமல் ஏழைகளின் நலன்களை கருத்தில் கொண்டு நிலம் - வீடு வழங்கினால் லட்சக்கணக்கான மக்கள் நமது அரசை வாழ்த்தி மகிழ்வார்கள். முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், உழவர் பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு மாத உதவித் தொகை ரூ. 3,000/-மாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.

வேளாண்துறை

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது வேளாண்மை தொழில் தான். அதனை கவனத்தில் கொண்டு உழவர்தம் உள்ளத்தையும், வறியோர் வயிற்றில் உள்ள பள்ளத்தையும் நிரப்ப தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது என்பது வேளாண்மையே சிறந்த தொழில் என்பது மகிழ்ச்சிக்கு வித்திடுகிறது. விவசாயப் பரப்பளவை அதிகரித்தல், மானாவாரி நிலங்களை மேம்படுத்துதல், சிறு-தானிய உற்பத்திக்கு கூடுதல் முக்கியத்துவம் எண்ணெய் வித்து பண்ணைகளின் உற்பத்தியை அதிகரித்திட திட்டம், பயிர்க் காப்பீடுக்கு நிதி ஒதுக்கீடு, பட்டியல் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 20 சதவிகிதம் மானியம் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதாகும். அதே நேரத்தில் கடந்த ஆண்டு நிதிநிலையை விட ரூ. 221.90 கோடி மட்டுமே கூடுதலாக ஒதுக்கீடு உள்ளபோது வளர்ச்சி வேகம் தடைபட்டு விடாமல், விவசாயிகள் வேளாண்மைத் தொழிலை விட்டு வெளியேறும் அபாயத்தை தடுத்திட வேண்டும். உழவர்களின் வாழ்வினை உயர்த்திட வேண்டும்.

கரும்பு விவசாயிகளுக்கு  இனிப்பான செய்தியாக...

குறிப்பாக, தொழில்துறை வசமிருந்த சர்க்கரைத் துறை வேளாண்மைத்துறைக்கு மாற்றப்பட்டது மகிழ்ச்சியானதாகும். கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ. 195/- வழங்கப்படும் என்ற அறிவிப்பு உள்ளது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் டன் ஒன்றுக்கு ரூ. 4,000/- வழங்கினால் தான் கரும்பு விவசாயிகளுக்கு இது இனிப்பான செய்தியாக மாறும். தென் மாவட்டங்களில் உள்ள ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலை என்பது மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தான். இந்த ஆலை இயங்காமல் நீண்ட நாட்களாக உள்ளது. விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். எனவே விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையை மீண்டும் திறந்து இயக்கிட வேண்டும். நெல்கொள்முதலுக்கு தார்ப்பாய், உலர் களங்கள் மிக அவசியமாகும். கொள்முதல் செய்த நெல்லை சேமித்திட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் சேமிப்பு பாதுகாப்பு கிடங்குகள் இல்லாமல் திறந்த வெளியில் உள்ளதை போக்கிட வேண்டும்.

நெல் ஆதார விலை ரூ.2500...

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குறித்து அறிவிப்பு இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது. குவிண்டாலுக்கு ரூ. 2,500/- வழங்கிட அறிவிப்பு செய்தால் நெல் உற்பத்தியும் அதிகரித்திடும். உழவர்களின் உள்ளமும் மகிழ்ந்திடும். தமிழக பொருளாதாரம் உயர்ந்திடும். காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து அறிவிப்பில் ஏதுமில்லை, ஏழு, எட்டு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தைச் சார்ந்துள்ளதால் அத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கிராமப்புற மேம்பாட்டிற்கு பயனளிக்கும் வகையில் நூறு நாள் வேலை திட்டத்தை மேம்படுத்திட வேண்டும். வேலை நாட்கள் அதிகரிப்பு, கூலி உயர்வு, வேலை நேரங்கள் மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட அரசு கவனம் செலுத்திட வேண்டும். கடந்த நிதிநிலை அறிக்கையில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தியதில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. ஆகையால் நகர்ப்புற உள்ளாட்சிகள் (பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி) அனைத்திற்கும் விரிவுபடுத்திட வேண்டும்.

தொழிலாளர்களின் கோரிக்கைகள்

அமைப்புசாரா தொழிலாளர்கள் ஏறத்தாழ இரண்டு கோடி பேர் எவ்வித சமூக பாதுகாப்பும் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றனர். ஏற்கனவே தனித்தனியாக அமைக்கப்பட்ட தொழிலாளர் நல வாரியங்கள் மீண்டும் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். சீரமைக்க வேண்டும். பாதுகாத்திட வேண்டும்.  கூட்டுறவு நூற்பாலைகள், குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சித் துறையில் மேல்நிலை குடிநீர் தொட்டி பராமரிப்பு பணியாளர்கள், மின்சாரம், போக்குவரத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட அரசுத்துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தற்காலிகப் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கௌரவ விரிவுரையாளர்களையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

மின் தொடரமைப்பு கழகம், தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், பொது கட்டுமான வட்டம், எரிவாயு சுழலி பகுதி, அனல், புனல், காற்றாலை மின் நிலையங்கள் உள்பட அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய  வேண்டும். பெண் கள உதவியாளர்கள் கம்பம் ஏறுவதை தவிர்த்திட வேண்டும்.  அரசுப் போக்குவரத்து கழகங்களை பாதுகாத்திடவும், தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும். ஓய்வு காலப் பலன்கள், மருத்துவ காப்பீடு, அகவிலைப்படி உயர்வு போன்ற உதவிகளை நிறைவேற்ற வேண்டும்.

அரசுக்கு வருவாய் அதிகரித்திட

நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு செய்துள்ள திட்டங்களையும் தமிழகத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ள பொருளாதார நிலைகளையும் மேம்படுத்திட தமிழகத்தின் அற்புதமான கனிம வளங்களை ஆதாரமாகக் கொண்டு அரசுக்கு வருவாயை உயர்த்திட வேண்டும். மணல், தாதுமணல், கிரானைட் தொழில்களால் அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதை கள ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அத்தகைய கனிமத் தொழில்களை நிர்வாகச் சீர்கேடுகளின்றி அரசே இயக்கினால் வருவாய் அதிகரிப்புக்கு வாய்ப்புகள் உருவாகும். சேவைத் துறைகளையும் பாதுகாத்திட முடியும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை மதிப்பூதியம், தொகுப்பூதியம், ஒப்பந்த முறை, தினக் கூலிகள் என பணி நிரந்தரமில்லாமல் நடைபெறும் சுரண்டல் முறைக்கு தீர்வு காண நமது அரசு சீரிய முயற்சி எடுக்க வேண்டும்.