tamilnadu

img

முதல்வருக்கு தமிழக ஆயர்பேரவை எஸ்.சி.- எஸ்.டி.பணிக்குழு நன்றி

திண்டுக்கல், ஏப்.21-  பட்டியலின கிறிஸ்தவர்களுக்கு பிற பட்டியலின சமூக மக்கள் பெறும் அனைத்து சலுகைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர்  ஸ்டாலினால் தனித்தீர்மானம் முன்மொழியப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக ஆயர் பேரவை பட்டியலின -பழங்குடியினர் பணிக்குழு  நன்றி, பாராட்டுதலை தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக திண்டுக்கல் பிரஸ்கிளப்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்  இவ்வமைப்பின் மாநிலத் தலைவர்  ஆயர் பி.தாமஸ் பால்சாமி கூறியதாவது: ஆதிதிராவிடர்களாக இருந்து கிறிஸ்தவ மதத்தை தழுவிய பின்னரும் தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை பட்டியலின உரிமைகளை இழந்து நிற்கும் தலித் கிறிஸ்தவர்கள் வரலாற்று ரீதியாக ஆதிதிராவிடர் வகுப்பினராக இருப்பவர்களுக்கு பட்டியலின வகுப்பினருக்கான உரிமைகளை வழங்குவதே சரியானது.

இதன் மூலம் இப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை, தனித்தொகுதிகளில் தேர்தலில் நிற்கும் உரிமை, சட்டப்பாதுகாப்பு ஆகியவை கிடைக்கும் என்பதை சரியாக புரிந்துகொண்டு இந்த தனித்தீர்மானத்தை கொண்டு வந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பட்டியலின கிறிஸ்தவ மக்கள் மற்றும் தலித் கிறிஸ்தவ இயக்கங்களின் தலை வர்கள், சமூக ஆர்வலர்கள், அனைவரின் சார்பிலும் நன்றியையும், வாழ்த்தையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  இதற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன் (விசிக), சட்டமன்றத்தில் ஆதரித்துப் பேசிய அனைத்து கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச்செல்வன் (விசிக), இனிகோ இருதயராஜ், பிரின்ஸ், ஓ.பன்னீர்செல்வம், டி.வேல்முருகன், ஈஸ்வரன், டாக்டர் சதன் திருமலைக்குமார், டி.ராமச்சந்திரன், எம். சின்னத்துரை, ஜவாஹிருல்லா ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.  அமைப்பின் செயலாளர்  அ.குழந்தைநாதன், மாவட்டச்செயலாளர் ஜான்பீட்டர் ஆகியோர் உடனிருந்தனர்.