tamilnadu

கவிபுனை ஆற்றல் வெல்லு! - கோவி.பால.முருகு

பாரதிப் பாடலைப் பாடு கண்ணே!-அது
பயிற்றிடும் நாட்டுப் பற்று பெண்ணே!
பாரதி தாசனைப்  பாடு கண்ணே!-அது

பகுத்தறிவு தருகின்ற பாதை பெண்ணே!
பட்டுக் கோட்டையைப் பாடு கண்ணே!-அது
பாட்டாளி வர்க்கத்தின் முழக்கம்  பெண்ணே!

அழவள்ளி யப்பாவைப் பாடு கண்ணே-அவை
அழகான குழந்தையின் தொட்டில் கண்ணே!
சுரதா கவிதை படிப்பாய் கண்ணே!-அது

சுட்டிடும் உவமையின் புதையல் பெண்ணே!
தமிழொளி கவிதைகள் 
    படிப்பாய் கண்ணே-அதில்
தவழ்ந்திடும் கொள்கையை 
    ஏற்பாய் பெண்ணே!

வாணி தாசனைப் பாடு  
    பெண்ணே-அவர்
வழியோ பாரதி தாசன் கண்ணே!
ஈரோட்டு தமிழன்பன் கவிதை 
    பெண்ணே-அதில்

ஈர்த்திடும் தமிழ்மணம் நுகர்வாய் கண்ணே!
கவிதைகள் படிப்பதில் ஆர்வம் 
    கொள்ளு!-அதைக்
கற்றே  கவிபுனை ஆற்றல் வெல்லு!