இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான மயான இடத்தில் ஆக்கிரப்புகளை அகற்றுக!
நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்
அரியலூர், ஜூலை 9- ஜெயங்கொண்டத்தில், இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான மயான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, இஸ்லாமியர்கள் ஏராளமானோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே, விருத்தாச்சலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மயானம் அமைந்துள்ளது. அந்த இடம் வக்பு வாரியத்துக்குச் சொந்தமான இடம் என்று இஸ்லாமிய அமைப்பினரும், அரசு புறம்போக்கில் உள்ளது என மற்றொரு தரப்பிலும் கூறப்பட்டு வரும் பிரச்சனைக்குரிய அந்த இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இஸ்லாமிய அமைப்பினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயங்கொண்டம் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனாலும், பிரச்சனைக்குரிய இடத்தில் ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை. இதில் அதிர்ச்சி அடைந்த ஜெயங்கொண்டம் சுன்னத் ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் பிரச்சனைக்குரிய இடத்தில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை பிரச்சனைக்குரிய இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் இஸ்லாமியர்கள், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோட்டாட்சியர் சொல்லியும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன் என நகராட்சி அலுவலர்களுடன் இஸ்லாமிய அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சாலை மறியல் மற்றும் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையினர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில், போராட்டத்தைக் கைவிட்டனர்.