சென்னை, ஜன. 27 - பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் சட்டத் திருத்தத்தை கைவிட கோரி வெள்ளியன்று (ஜன.28) ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக கூட்டுப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆனந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுக்காப்பீட்டு நிறுவனங்களான நியூ இந்தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து அகில இந்திய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். 54 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், அனைவருக்கும் 1995 பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பென்ஷன் திட்டத்தில் முன்னேற்றங்கள் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. 16 சங்கங்களை உள்ளடக்கிய கூட்டு போராட்டக்குழு விடுத்த அறைகூவலின்படி நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தில் 50 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அன்றைய தினம் நாடு முழுவதும் அனைத்து அரசு பொது காப்பீட்டு அலுவலகங்களும் மூடப்பட்டு இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.