tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஊரக பகுதிகளுக்கான 3 ஆம் கட்ட  ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்

மயிலாடுதுறை, மே 24-  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில், ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட, மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை  உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர்.கோவி செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் பார்வையிட்டு, உடனடி தீர்வு காணப்பட்ட கோரிக்கை மனுக்களுக்குரிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் முகம்மது ஷபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)உமாமகேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள்  சிறப்பு குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், மே 24-  தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வாகனம், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 120 மனுக்கள் ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் அருள்பிரகாசம் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இலவச சிறப்பு மருத்துவ முகாம்

பாபநாசம், மே 24-  பெரம்பலூர், சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, வழுத்தூர் சௌக்கத்துல் இஸ்லாம் பள்ளிகள், ஜமாத்தார்கள் இணைந்து நடத்திய இருதயம், பொது மருத்துவத்திற்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் வழுத்தூர் சௌக்கத்துல் இஸ்லாம் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது. இதில், மருத்துவர்கள் இதய நிபுணர் பரத்குமார், பொது மருத்துவம் சிவகாமி, ஆதி விநாயகம் ஆகியோர் 140 பேருக்கும் மேல் பரிசோதனை மேற்கொண்டனர்.  இதில் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு, ஈ.சி.ஜி, எக்கோ மேற்கொள்ளப்பட்டது. மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி நிர்வாகிகள் அப்துல் ரவூப், பஷீர் அகமது உட்பட ஜமாத்தார்கள் பங்கேற்றனர்.