tamilnadu

img

இந்தியத் தொழில்கள் மீது ஈவு இரக்கமற்ற தாக்குதலை தொடுக்கிறது மோடி அரசு

கோயம்புத்தூர், நவ. 15 - பன்னாட்டு கார்ப்பரேட் நண்பர் களின் நலனுக்காக இந்திய தொழில்கள் மீது ஈவு இரக்கமற்ற தாக்குதலை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தொடுத்து வருவதாக கோவையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சீத்தாராம்யெச்சூரி குற்றம்சாட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவம்பர் புரட்சிதின விழா  பேரணி மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் கோவையில் திங்க ளன்று நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமை வகித்தார். சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கருத்துரையாற்றினார்.  சீத்தாராம் யெச்சூரி பேசுகையில், மோடி அரசின் எட்டாண்டு கால ஆட்சி யில் மக்கள் பெரும் துன்ப துய ரத்திற்கு ஆளாகி வருகின்றனர். பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங் களின் வளர்ச்சிக்காக இந்திய தொழில்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறதை நாம் தொடர்ந்து  கூறி வருகிறோம். இன்று (நவ.14)  காலை கோவை வர்த்தக தொழில் முனைவோர் சங்கங்கள் என்னிடம் ஆலோசனை மேற்கொண்டனர். வழக்கமாக இவர்கள் கம்யூனிஸ்டு களை அழைப்பதில்லை. நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், இந்த முறை நம்மை அழைத்து, ஒன்றிய அரசின் கொள்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஜிஎஸ்டி, மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்டு அனைத்திலும் பாதிப்புக்குள்ளாகி வருவதை வெளிப்படுத்தினர்.

பம்ப் உற்பத்தியின் தலைநகரமாக கோவை மாவட்டம் உள்ளது. இப்போது மிகப்பெரிய கார்ப்பரேட் நிறு வனங்கள் பம்ப் உற்பத்தியில் ஈடுபடுமோ என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தி னர். இதேபோல, கோவையில் டெக்ஸ்டைல் துறை ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்க டியை விவரித்தனர். இதுதொழில் நெருக்கடி சார்ந்த பிரச்சனை மட்டு மல்ல, லட்சக்கணக்கான தொழி லாளர்களின் வாழ்வாதாரம் சார்ந்தது.  சிறு குறு நடுத்தர தொழில் முனை வோரை, தொழிலாளர்களை பாது காக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தவிர யாரும் இல்லை. எனவே உற்பத்தியாளர்களை அணி திரட்டி அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். பம்ப் மோட்டார்களை அதிகமாக நுகர்வு செய்வது விவசாயிகள்தான் இந்த விவசாயிகள் விளைவித்த கொப்பரை தேங்காய்க்கு, கரும்புக்கு உரிய விலை கொடுப்பதில்லை. ஆனால், கொப்பரை தேங்காய்க்கு ஜிஎஸ்டி, கரும்பில் இருந்து உற்பத்தி யாகும் சர்க்கரைக்கு ஜிஎஸ்டி என வரி விதித்து ஈவு இரக்கமில்லாத கொள்ளை யடிக்கிறார்கள். பாஜக அரசு விவசாயி களிடம் தெரிவித்த எந்த வாக்குறுதி யையும் நிறைவேற்றவில்லை. 2023ஆம் ஆண்டு தில்லியில் நாடாளுமன்றம் முன்பு லட்சக்கணக்கான விவசாயி களும், விவசாயத் தொழிலாளர் களும் போராட்டத்தில் ஈடுபட உள்ள னர். விவசாயிகள் நலனை பாது காத்தால்தான் பம்ப் மோட்டார் தொழில் செழிக்கும். ஆகவே அவர்கள் போராட்டத்திற்கு உங்களின் ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என்கிற வேண்டுகோளை விடுத்துள்ளேன். இந்தப் போராட்டங்களின் உச்சகட்ட மாக மோடி அரசை வீழ்த்தவேண்டும். 

உணவுப் பொருட்கள் மீதான வரி விதிப்பு 

இந்தியாவில் இதுவரை ஆண்ட அரசுகள் உணவுப்பொருட்களின் மீது வரிகளை விதித்ததில்லை. பிரிட்டீஷார் உப்புக்கு வரி விதித்ததை  எதிர்த்து மகாத்மா காந்தி நடத்திய தண்டி யாத்திரை வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்தது.  ஆனால், இன்று இந்தியாவில் எல்லா உணவுப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரிவிதிக்கப்பட்டுள்ளது. நான் இன்று கோவையில் சாப்பிட்ட அப்ப ளத்தின் மீது ஜிஎஸ்டி விதித்துள் ளார்கள். அனைத்து உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல் மீதான வரியையும் திரும்பப் பெற வேண்டும் என்று மோடி அரசை வலியுறுத்துகிறோம். இரட்டை இன்ஜின் ஆட்சியை மோடி தொடர்ந்து பேசி வருகிறார். பொது வாக ரயில் இன்ஜின் என்பது பெட்டி களின் முன்புறம் இணைக்கப்பட்டு இழுத்துச்செல்லும், பின்புறம் இணைக்கப்பட்ட இன்ஜின் பின்புறம் இழுக்கப் பயன்படும். மோடி சொல்கிற இரட்டை இன்ஜின் முன்புறமும், பின்புற மும் இணைக்கப்பட்டிருந்தால், ரயில்  ஒருபோதும் நகராது. மாறாக ஒன்றுக் கொன்று இழுத்துக்கொள்வதால் ரயில் பாழாகிவிடும். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.  தமிழகத்தில் கடந்த ஆட்சியில் அதிமுகவும், பாஜகவும் இரட்டை இன்ஜினாக இருந்ததால் தமிழகம் பட்ட துன்பத்தை அறிவோம். இதனை தமிழக மக்கள் எதிர்கொண்டு இரட்டை இன்ஜின் ஆட்சி வேண்டாம் என விரட்டி யடித்தார்கள். அதுதான் இப்போது இமாச்சலப் பிரதேசத்திலும், குஜராத் சட்டமன்றத் தேர்தலிலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பிஜேபிக்கு சரியான பதிலடி அம் மாநிலங்களின் மக்கள் அளிப்பார்கள். 

இந்துத்துவாவை திணிக்க முயற்சி

இந்தி என்ற ஒற்றை மொழியை பாஜக திணிக்க நினைக்கிறது. இந்தி, இந்துஸ்தான் என்று முயற்சி செய்து வருகிறது. இந்தியாவில் உள்ள  அனைவருக்கும் சமமான வாய்ப்புகள்  வழங்க வேண்டும். நான் சென்னையில்  பிறந்தேன். படிப்பை ஹைதராபாத்தில்  மேற்கொண்டேன். அங்கு இஸ்லா மியர்கள் அதிகமாக இருந்ததால் உருது மொழியை கற்றுக்கொண்டேன். தலைநகர் தில்லியில் கடந்த 50 ஆண்டு களுக்கு மேலாக அரசியல் பணியை மேற்கொண்டு வருகிறேன். நான் ராஜ்ய  சபா உறுப்பினராக மேற்குவங்கம் கொல்கத்தாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டேன். இப்போது நான் யார்? நான் ஒரு இந்தியன். அனைத்து மக்களின் உணர்வுகளை, பண்பாட்டு விழுமியங்களை ஒன்றிய பாஜக அரசு மதிக்க வேண்டும்.  கேரளாவிலும், தமிழ் நாட்டிலும்,  தெலுங்கானாவிலும் ஆளுநர்களை பயன்படுத்தி அதிகாரம் செலுத்தி வரு கிறார்கள். வேந்தர்களாக ஆளுநர்கள் செயல்பட்டு பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்த பார்க்கின்றனர். கல்வித்துறையில் இந்துத்துவாவை புகுத்த குறிவைத்துள்ளனர். கல்வி யில் இந்துத்துவாவை கொண்டுவர ஆளுநர்கள் மூலம் முயற்சி செய்து  வருகின்றனர். ஒற்றைக் கலாச்சாரத்தை கொண்டு வந்து இந்துத்துவா நாடாக மாற்ற முயற்சி செய்து வருகின்றனர். பாசிச ஆட்சியை நடத்த ஏதுவாக நிலக்கரி, எல்ஐசி, ரயில்நிலையம், விமானநிலையம் உள்ளிட்ட இந்திய  வளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு வகைதொகை யின்றி விற்கிறார்கள். கார்ப்பரேட், மத வெறி கூட்டணியை பாஜக மேற் கொண்டு வருகிறது. பொதுத்துறை நிறு வனங்கள் சூறையாடப்படுகின்றன. ஒட்டுமொத்த பொருளாதார இறை யாண்மையை சூறையாடி வருகின்ற னர். இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய தொழில்கள் மீது ஈவு இரக்க மற்ற தாக்குதலை மோடி அரசு தொடுத்து வருகிறது.

அனைத்து மதச்சார்பற்ற சக்திகள் இணைய வேண்டும்

பாஜகவை தில்லியில் இருந்து  துரத்த வேண்டும். அதற்காக இந்தியா  முழுவதும் உள்ள அனைத்து மதச்சார் பற்ற சக்திகளும் ஒற்றுமையாக இணைய வேண்டும்.அப்படி ஒற்றுமைப் படுத்துவதற்கான பணியில் நாம் ஈடுபட்டுள்ளோம். பரந்து விரிந்த அணியை சேர்க்க ஏற்பாடு செய்து வருகிறோம். பாஜகவை 2024 தேர்த லில் வரவிடாமல் தடுப்பது நம் கடமை. அதனை வலுவோடு முன்னெடுத்துச் செல்வோம். கோவை மக்கள் பல சாதனை படைத்தவர்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பாஜகவை விரட்டியடித்து கம்யூனிஸ்ட் கட்சியை வெற்றிபெறவைத்தீர்கள். அதேபோல மீண்டும் பாஜகவை எதிர்க்க ஒன்றுபட்டு நில்லுங்கள் என்கிற வேண்டுகோளோடு நிறைவு செய்தார்.  சீத்தாராம் யெச்சூரியின் ஆங்கில உரையை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பி.ராஜேந்திரன் தமிழாக்கம் செய்தார். இக்கூட்டத்தில் கட்சியின் கோவை  நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, யு.கே.சிவஞானம், கே.எஸ்.கனகராஜ் உரையாற்றினர்.  கோவை பீளமேடு நகரக்குழு செயலாளர் கே.பாண்டி யன் நன்றி கூறினார்.