தமிழ் /ஆங்கிலம் / 70 நிமிடங்கள்
இயக்கம்: லீனா மணிமேகலை
இலங்கையில் நடந்த உச்சகட்டப் போர் சம யத்தில் ராணுவத்தால் குண்டு வீசி கொல்லப் பட்டவர்கள் ஒருபுறமிருக்க, விசாரணைக்காக என்று ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டோர் பலர். அவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்? என்ன ஆனார்கள்? என்ற எந்தச் செய்தியும் இல்லாமல் “காணா மல் போய்விட்ட” தங்கள் இரத்த உறவுகளை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களின் அழுகுரலாய் இருக்கிறது இந்த ஆவணப்படம். புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநர் லீனா மணி மேகலையின் “வெள்ளை நிற கூடுந்து கதைகள்” என்ற இந்த ஆவணப்படம் போர் முடிந்து அமைதி திரும்பு வதாகச் சொல்லப்பட்ட காலத்தில் இலங்கையில் எடுக்கப்பட்டிருக்கிறது. ராணுவத்தின் கடும் கெடுபிடி களுக்கு இடையே வடக்கு இலங்கையின் தமிழர்கள் வாழும் பல பகுதிகளுக்குப் பயணம் சென்று தங்கள் உற்றார்களை இழந்து துடிக்கும் மனங்களின் கண்ணீரை அள்ளி வந்திருக்கிறது. மெல்ல மெல்ல அவர்கள் ஒன்றிணைந்து காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரும்படி நடத்திய போராட்டத்தையும் பதிவு செய்திருக்கிறது. தமிழர்கள் மட்டுமல்ல, இலங்கை ஆளும் வர்க்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக குரலெழுப்பிய சிங்கள அரசியல் வாதிகளும், ஊடகவியலாளர்களும், படைப்பாளர் களும் கூட காணாமலடிக்கப்பட்டதை பதிவு செய்திருக்கிறது இந்த ஆவணப்படம்.
இந்த மனிதர்களின் துயரத்தை விடவா என் வாழ்க்கை பெரிதாகி விட்டது? என்ற கேள்வியுடன் இயக்குநர் லீனா தனது படக்குழுவினருடன் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு படம்பிடித்து வந்து இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளது நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. பன்னாட்டளவில் புகழ்பெற்ற இந்த ஆவணப்படத்தில் வரும் உற்றாரை இழந்த பெணணொருத்தியின் கண்ணீர்க் கவிதை இது:
அன்புள்ள தோழி..
எப்படி இருக்கின்றாய்? என்றொரு வரி எழுதி
உன்னை நான் விசாரிக்க
எங்கு நீ உள்ளாய் சொல்?
நெருப்பு வயல் கடந்து நீயும் நானும் வருகையிலே
என் கைவிட்டுப் போனாயே
காணாமல் போனாயே..
உன் அம்மா உனைக் கேட்டு
என் வாசல் வருகையிலே
உன்னைக் காணவில்லை என்று சொல்ல
கண்ணீர் வருகிறதே..
ஒரு பொதிச் சாப்பாட்டை
எட்டுப் பேர் உண்டோமே
இன்று தனித் தட்டில் உண்கையிலே
தவிக்கிறது என் மனசு
நீ ஆட நான் பாட
நான் எழுத நீ படிக்க
ஒன்றுக்குள் ஒன்றாக வாழ்ந்தோமே தோழி
இன்று ஒற்றைப் பனைமரமாய் தனித்தேனே தோழி
சண்டைகள் வென்ற கதை
சறுக்கியும் தோற்ற கதை
பதுங்கிச் சுட்ட கதை
பவளமக்காள் விழுந்த கதை
பேசிய பொழுதுகளை பேச ஆள் இல்லையடி
இறுதி நாட்களிலே இருண்ட வானமதில்
தீப்பிழம்பு பொழிகையிலே
காலொடிந்து விழுந்தாயோ? கருகி உயிர் மாண்டாயோ?
படையினர் வசம் தந்து உனை இழந்து செத்தாயோ?
கடுஞ்சிறை எங்கேனும் கலங்கி மனம் துடிக்கிறாயோ?
ஊர்தோறும் தேடி உன்னைக் காணவில்லை
உயிருடன் இருப்பதற்காய் அறிகுறிகள் ஏதுமில்லை
உயிரோடு உனைக் கண்டால் என் தேடல் தொடருமடி
உயிரற்ற உடல் கண்டால் என் தேடல் முடியுமடி.
இலங்கை கவிஞர் வெற்றிச்செல்வி