tamilnadu

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய், தண்டு ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய்,  தண்டு ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

வேளாண்மை உதவி இயக்குநர் விளக்கம்

தஞ்சாவூர், மே 29-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜி.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உளுந்து பயிரை தாக்கும் பூச்சிகளில் தண்டு ஈ, அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ ஆகியன மிக முக்கிய பூச்சிகளாகும். தண்டு ஈ தாக்குதலால் செடிகள் முற்றிலும் காய்ந்து விடும். இதை கட்டுப்படுத்த மானோகுரோட்டோபாஸ் மருந்தினை விதைத்த 7 ஆம் நாள் 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். வளர்ச்சி பருவத்தின்போது தாக்கும் அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ ஆகியவற்றை கட்டுப்படுத்திட மீத்தைல் டெமட்டான் (அல்லது) டைமீத்தோயேட் (அல்லது) பாஸ்போமிடான் இதில் ஏதாவது ஒரு மருந்தை 2 மி.லி.யை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.  அசுவினியின் தாக்குதல் அதிகமாக தென்பட்டால் இதற்கு டைக்குளோர்வாஸ் 2 மி.லி. மருந்தினை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.  நோய்களை பொருத்தமட்டில் மஞ்சள் தேமல் நோய், வாடல் நோய், வேர் அழுகல் நோய், சாம்பல் நோய் ஆகியன முக்கியமானவையாகும்.  மஞ்சள் தேமல் நோய் தென்பட்டால் உடனே பயிரை பிடுங்கி அப்புறப்படுத்துவதே சிறந்த கட்டுப்பாடாகும்.  வாடல் நோய் மற்றும் வேர் அழுகல் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கி அகற்றி, அந்த இடத்தில் பாவிஸ்டின் 10 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து செடி பிடுங்கிய இடத்தில் கரைசலை ஊற்ற வேண்டும்.  இதனால் நோய் பரவாமல் தடுக்கலாம். சாம்பல் நோய் தென்படும் இடங்களில் 1 லிட்டர் தண்ணீரில் நனையும் கந்தகத்தூள் 10 கிராம் மருந்தை கரைத்து தெளித்து கட்டுப்படுத்தலாம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.