tamilnadu

img

செங்கொடி உயரட்டும்! தமிழகம் நிமிரட்டும்! - கே.பாலகிருஷ்ணன் ,மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

மதுரைக்கு, ‘தூங்கா நகரம்’ என்றொரு பெயரும் உண்டு. நகரம் உறங்காது என்றால் அதன் பொருள் என்ன? உழைப்பிற்கு தயங்காத மக்கள்தானே, நகரமாக ஆகிறார்கள்? அப்படி, இரவும் பகலும் உழைப்பினால் மிளிரும் மாநகராம் மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 23 வது மாநில மாநாடு நடை பெறவுள்ளது. பொதுவாக, அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகள், தலைவர்களின் பேருரைகளை யும், பெரும் மக்கள் திரளையும் உள்ளடக்கிய கொண்டாட்டங்களாக மட்டும் அமைகின்றன. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் மாநாடு கள் கொண்டாட்டங்களை மட்டும் கொண்டவை அல்ல; உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சபட்ச வெளிப்பாடுகளாக அவை அமைந்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை, அகில இந்திய மாநாடுதான், அரசியல் திசை வழியைத் தீர்மானிக்கும் உயர்ந்த அதிகாரம் கொண்ட அமைப்பு ஆகும். அதே போல  மாநில மாநாடுகள்தான், குறிப்பிட்ட மாநிலத்தின் அரசியல் சூழலையும், அனுபவங்களையும் விவாதித்து முடிவு களை மேற்கொள்கின்றன. இவ்வாறாக, மாவட்டம், இடைக் கமிட்டிகள், கிளைகள் என அனைத்து நிலைகளிலும் நடக்கும் மாநாடுகள், கட்சி அமைப்பின் முக்கியமான பகுதிகளாக அமைகின்றன.

தமிழ் மாநில மாநாடுகள் - ஒரு பார்வை

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில முதல் மாநாடு 1951 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்துள்ளது.  கோவையில் இரண்டாம்  மாநாடு (1953), திண்டுக்கல்லில் மூன்றாவது மாநாடு (1956), திருச்சியில் நான்காவது மாநாடு (1958), காரைக்குடியில் ஐந்தாவது மாநாடு (1959), கோவையில் ஆறாவது மாநாடு (1960) என ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாநாடுகளின் வரலாறு அமைகிறது. 1964 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த ‘கட்சி காங்கிரசிற்கு’ முன், இதே மதுரை மாநகரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த 7 வது மாநில மாநாடு நடைபெற்றது. அதன் பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 8 வது மாநில மாநாடு கோவையிலும் (1968), 9 வது மாநாடு சேலத்திலும் (1971) அவசர  நிலைக் காலத்திற்கு பின் சென்னையில் பத்தாவது மாநாடும் (1978),  கடலூரில் பதினொன்றாவது மாநாடும் (1981), சேலத்தில் 12 வது மாநாடும்  நடைபெற்றது (1985). மீண்டும் சென்னையில் (1988) கட்சியின் 13வது மாநாடு நடந்தது. உலகமயக் கொள்கைகள் அமலுக்கு வந்த பின்னணியில் கட்சியின்  14வது மாநில மாநாடு தஞ்சாவூரில் (1991) நடந்தது. 15வது மாநில மாநாடு  கடலூரிலும் (1995), 16வது மாநாடு திருச்சியிலும் (1997), 17வது மாநில  மாநாடு மீண்டும் கோவையிலும் (2002), 18 வது மாநில மாநாடு (2005) நாகர்கோவிலிலும் நடந்தது. மீண்டும் மதுரையில் கட்சியின் 19 வது மாநில மாநாடு (2008) நடந்தது. 20வது மாநாடு நாகப்பட்டினத்திலும் (2012), 21 வது மாநில மாநாடு  சென்னையிலும் (2015), பின் 22 வது மாநாடு தூத்துக்குடியிலும் (2018) நடந்தது.

தற்போது, கொரோனா பெருந்தொற்று தணிந்துள்ள பின்னணியில்,  4 ஆண்டுகளுக்கு பின் கட்சியின் மாநில மாநாடு மதுரையில் நடக்கிறது.  அதைத் தொடர்ந்து சில நாட்கள் இடைவெளியில் ஏப்ரல் 6 அன்று கட்சியின் அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் கண்ணூரில் துவங்கவுள்ளது. கடந்த நான்காண்டு காலத்தில் சர்வதேசிய, தேசிய மற்றும் தமிழகம் சார்ந்த பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கட்சி எண்ணற்ற இயக்கங்களை, போராட்டங்களை நடத்தி களம் கண்டுள்ளது. எட்டுவழிச்சாலை எதிர்ப்பில் துவங்கி காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக பாதுகாப்பது வரையிலான நில உரிமைகளைக் காக்கும் போராட்டங்கள்; தமிழகம் முழுவதும் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை முறையாக அமலாக்க நாள்தோறும் நடத்திய போராட்டங்கள்; பட்டியலின, பழங்குடியின மக்கள் நலன்காக்கவும் தீண்டாமைக் கொடுமைகளையும் சாதி ஆணவப் படுகொலைகளையும் எதிர்த்து களப்போராட்டங்கள், சட்டப்போராட்டங்கள்; பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் காக்க சிறப்பு மாநாடு மற்றும் தொடர் தலையீடுகள்; நீட் தேர்வுக்கு எதிராக, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக என மாணவர் நலன் காக்க; வேலையின்மை பிரச்சனைகளை முன்னிறுத்தி இளைஞர் நலன் காக்க தொடர் இயக்கங்கள்; ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் தமிழகம் முழுவதும் தொழிலாளர் பிரச்சனைகளில் உறுதிமிக்க தலையீடு; மாற்றுத் திறனாளிகள், நடுத்தர வர்க்க ஊழியர்கள்; சிறு வணிகர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினருக்காகவும் - நவீன தாராளமய கொள்கைகளின் விளைவாக தாக்குதலுக்குள்ளாகும் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களம் கண்டு, பல வெற்றிகளையும் படிப்பினைகளையும் பெற்று மாநாட்டில் சங்கமிக்கிறது.  

முன்னுக்கு வந்திருக்கும் சூழல்

உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகள் இப்போது வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களின் நலவாழ்விற்கு அடிப்படையாக உள்ள நிறுவனங்கள் அனைத்தையுமே ஒழித்துக் கட்டக்கூடிய போக்கு வேகமெடுக்கிறது. இப்போது, பெரு முதலாளி களின் கையில் செல்வ வளங்களை மேலும் கூடுதலாக குவிப்பதுதான்  ஒன்றிய பாஜக அரசின் ஒரே நோக்கமாக உள்ளது. மக்களின் கல்வியும், சுகாதாரமும் இன்ன பிற அடிப்படைத் தேவைகளும் பின்னுக்குத்  தள்ளப்பட்டு, பெரு முதலாளிகளின் லாப நலன் மட்டுமே முதன்மைப் படுத்தப்படுகிறது. கார்ப்பரேட் வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. அவர்கள் வாங்கிய பல லட்சம் கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இந்த சுமைகளையெல்லாம் மக்களின் மீது ஏற்றும் வேலை பகிரங்கமாக நடக்கிறது. பொதுப் போக்குவரத்து சீரழிந்தாலும் பரவாயில்லை என்று அதற்கான எரிபொருள் விலையை உயர்த்துகிறார்கள்; மக்களின் கூலியும் சம்பளமும் வெட்டப்படுகிறது; பொதுச் சொத்துக்கள் தனியாருக்கு குத்தகைக்கு தரப்படுகின்றன. சுங்கச் சாலைகளை அதிகரிக்கிறார்கள். விவசாயத்தை மென்மேலும் நொடியச் செய்கிறார்கள். படித்த படிப்புக்கு வேலையில்லை; ஆனால் கல்விக்கடன் தள்ளுபடிக்கு வழியே இல்லை. கடன் வசூல் பணியிலும் கூட கார்ப்பரேட்டுகளுக்கு லாபம் குவிக்க வழி ஏற்படுத்துகிறார்கள்.

மற்றொரு பக்கத்தில், நாட்டின் அடித்தளங்களாக அமைந்துள்ள பன்முகத்தன்மையையும், மதச்சார்பின்மையையும், பல்வேறு தேசிய இனங்களுக்கிடையிலான இணக்க வாழ்வையும் சிதைத்து, சாதி-மத வெறித்தனத்தை விசிறிவிடும் வேலை கள் நடக்கின்றன. ராமர் கோயில் கட்டு வதற்கு அரசே அறக்கட்டளை அமைக் கிறது. ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்திற்கு சலுகையும், விளம்பரமும் தரப்படுகிறது. இப்படி, தொடர்ந்து மக்களை பிளவு படுத்தினால் ஆட்சி அதிகாரத்தை நீண்ட காலம் தக்க வைக்க முடியும் என்ற ஆபத் தான சிந்தனை ஆதிக்கம் பெறுகிறது. அதற்கு பெரும்பான்மை ஊடகங்களும், பிற அரசு நிறுவனங்களும் சாமரம் வீசுகின்றன. 

மாநில உரிமைகளை முற்றாகப் பறித்து  காலில் போட்டு நசுக்கிவரும் ஒன்றிய பாஜக அரசு, ஜிஎஸ்டி வரியை அமலாக்கி மாநிலங்களின் வருவாயைப் பறித்தது மட்டுமல்ல, மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்குத் தொகையையும் கொடுக்காமல் பல லட்சம் கோடி ரூபாயை இழுத்தடித்து வருகிறது; தமிழக நலன்களை முற்றாகப் புறக்கணித்து வருகிறது; இந்தித் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை அமலாக்கம் உள்பட ஒன்றிய அரசு ஒரு முழுமையான எதேச்சதிகார- பாசிசத் தன்மைமிக்க அதிகார வெறியை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அதற்கு எதிராக நாடு முழுவதும் கரத்தாலும் கருத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒன்று  திரட்டி; தமிழகத்தில் திமுக உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களை இணைத்துக் கொண்டு; அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக கட்சி களுடன் கரம்கோர்த்தும், இடதுசாரி கட்சி களின் ஒற்றுமையை வலுப்படுத்திக் கொண்டும்  பெரும் போராட்ட இயக்கங் களை கட்டமைக்க வேண்டிய மகத்தான பணி நம் முன் காத்திருக்கிறது. நாடு முழுவதும் மேற்சொன்ன பிரச்ச னைகள் மக்கள் வாழ்விற்கும்,  ஒற்றுமைக்குமே கடும் சவால்களாக இருக் கின்றன. அமல்படுத்தப்படும் நாசகரக் கொள்கைகளை தடுத்து நிறுத்தவேண்டிய கடமை நம் அனைவரின் முன்னும் இருக்கிறது. இதுதான் ஒவ்வொரு நாளும் நடக்கின்ற போராட்டம். மக்கள் மத்தியில் அடையாளப்பூர்வமான செயல்பாடுகளை மட்டுமல்ல, பண்பு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தீவிரமான பணிகளை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழ்நாட்டின் நிலைமை

தமிழ்நாட்டிலும் நம் முன் அந்தக் கடமை இருக்கிறது. திமுக போன்ற கட்சிகளோடு ஒத்துழைத்து ஒத்த கருத்துக்களை வலுப் படுத்திச் செயல்படுவதுடன், இடதுசாரி ஒற்றுமையையும், மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சியையும் ஒரு சேர முன்னெடுப்பது, இப்போதைய தேவை ஆகும். தமிழகத்தில் நவீன தாராளமய கொள்கைகள் அமலாக்கத்தின் விளை வாக, தமிழக மக்களின் வாழ்க்கைப் பிரச்சன ைகள் தீர்ந்தபாடில்லை. வேலையின்மை அதிகரித்துள்ளது. வறுமை தொடர்ந்து  நிலவிக்கொண்டுள்ளது. கல்வியிலும், சுகாதாரத்திலும், உட்கட்டமைப்பிலும்  தமிழகம் ஓரளவு முன்னேற்றங்களை சாதித் திருப்பது உண்மைதான். ஆனாலும், இவையெல்லாம் தனியாரின் லாபக்காடாக ஆகியிருப்பதும் உண்மை. அரசின் பங்களிப்பு மிகக் குறைவாக இருக்கிறது. தொழில் வளர்ச்சி முக்கியமானதே; எனினும் தமிழ்நாட்டை நோக்கி தங்கு தடைகளின்றி, மூலதனத்தை வரவேற்பதும், மூலதனத்தின் வருகைக்காக சலுகைகளை அள்ளிக் கொடுப்பதும், தொழிலாளர் நலனில் தளர்வுகள் ஏற்படுத்துவதும் தொழில் வளர்ச்சிக்காக என்ற பெயரில் கேட்பதையெல்லாம் கொடுப்பதுவும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். தமிழகத்தில் கனிம வளங்கள் சூறை யாடப்படுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைவதும் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகளாக மாறியுள்ளன. 

கல்வியிலும், சுகாதாரத்திலும் ஏற் பட்டுள்ள முன்னேற்றங்களும் கூட, தனியார் மயத்தின் காரணமாக தாக்குதலுக்கு ஆளாகின்றன. தனியார்மயத்தின் மூலம் கிடைத்திருக்கும் மனித வள மேம்பாட்டு வளர்ச்சியில், அரசின் பங்களிப்பு குறை வானதே!

இடதுசாரிப்பாதை 

நீண்ட காலமாக அமலாக்கப்பட்டு வரும் உலகமய-தாராளமய-தனியார்மயக் கொள்கைகளால் ஏற்றத்தாழ்வு கடுமையாக அதிகரித்துள்ளது. எனவே விவசாயத்திற்கு உதவுவது மிக அவசியம். தமிழ்நாட்டில் இன்னமும் நிலக் குவியல் தொடர்கிறது. ஊரகப் பகுதிகளில் வாழும் மக்கள் நொடித்துப் போயுள்ளார்கள். இதன் காரண மாகத்தான் நகரப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிக்கிறது. ஊரகப் பகுதிக ளில் வாழும் மக்களுடைய வாழ்நிலையை மேம்படுத்துவது நம் முன் உள்ள அவசர, அவசியக் கடமை. இதனை சாதிப்பதற்கு இடதுசாரி மாற்றுக் கொள்கைகள் மட்டுமே வழிவகுத்திடும்.

இடதுசாரி மாற்றுக் கொள்கைகளை எப்படி அமல்படுத்த முடியும் என்பதற்கு கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு ஓர் உதாரணமாக திகழ்கி றது. இதை கட்சியின் 22வது அகில இந்திய மாநாட்டின் அரசியல்- ஸ்தாபன தீர்மானம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது: “இடது ஜனநாயக திட்டமானது, நவீன தாராளமய மற்றும் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கு மாற்றாக திகழ்கிறது. தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், கிரா மப்புற தொழிலாளர்கள் மற்றும் இதர உழைக்கும் மக்களின் அடிப்படை கோரிக் கைகளைக் கொண்டதாக இருக்கும். இது பரந்த அளவிலான பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை மிகத் துல்லியமாக அடை யாளம் கண்டு இடது மற்றும் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும். வர்க்கப் போராட்டங்களையும், வெகுஜன இயக்கங்களையும் கட்டி எழுப்பவும், இடது ஜனநாயக மாற்று என்பதை முன்னிறுத்த வும் இந்த திட்டம் அவசியமானதாகும்” என்று கூறுகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையையும், இப்போ தைய சூழலுக்கு தேவையான இடதுசாரி  மாற்று நடவடிக்கைகளையும் விவாதிக்கும்  கடமையை மார்க்சிஸ்ட் கட்சியின் 23 வது  மாநில மாநாடு கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இருந்து வரக்கூடிய பிரதிநிதிகள், போராட்டக் களங்களில் பெற்ற செறிவான அனுபவங்களைக் கொண்டு விவாதங்களை மேற்கொள்வார்கள். 

செங்கொடிப் பாதையில் தமிழகத்தை தலைநிமிரச் செய்யும் மகத்தான கட மையை நிறைவேற்றும் விதமாக மதுரை மாநாடு வழிகாட்ட இருக்கிறது. மாநாட்டின் துவக்க நாளன்று (மார்ச் 30) மாலை பல்லா யிரக்கணக்கான செந்தொண்டர்கள் அணிவகுக்கும் எழுச்சிமிக்க செம்படை அணிவகுப்பும் மாபெரும் பொதுக்கூட்ட மும் நடைபெற உள்ளன. இந்த மாநாட்டின் முன்னோட்ட நிகழ்வாக மார்ச் 23 (இன்று) மாவீரன் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மகத்தான புரட்சிகர விடுதலைத் தியாகிக ளின் நினைவு தினத்தில் தமிழகம் முழுவதும்  மாநாட்டு கொடிநாள் கடைபிடிக்கப்படு கிறது.  பாட்டாளி வர்க்கத் தோழர்களே, வீதிகள் தோறும் செங்கொடி உயர்த்துவீர்! செம் பதாகை உயரட்டும், தமிழகம் தலை நிமிரட்டும்!