என்.சங்கரய்யா நேர்காணல் ,செம்மலர் இதழுக்காக 1995 இல் சந்திப்பு எழுத்தாளர் சு.வெங்கடேசன்
உள்ளத்தில் உண்மையும், தெளிவும் இருந்தால்தான் வாக்கினில் அது வெளிப்படும். இது மார்க்சிஸ்டுகளுக்கு மிகவும் பொருந்தும். ஏன் என்றால் உண்மையான தத்துவத்தின்பால் உள்ளத்தை பறிகொடுத்தவர்கள் மார்க்சிஸ்டுகள். அவர்களால்தான் ஈடு இணையற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். அவர்களுடைய வாக்கின் ஒளியில் நம் தேசத்தின் இருட்டு மறையும் நாள் வெகுதொலைவில் இல்லை.
* கலை இலக்கியத்துறையில் தீவிர ஆர்வமுள்ள அரசியல் தலைவர் நீங்கள். எனவே பழங்காலத் தமிழ் இலக்கியம் பற்றி தொடங்கலாம்.
ஏராளமான மனித உண்மைகள் அடங்கியுள்ள மாபெரும் பொக்கிஷம் சங்க இலக்கியம். அதை நாம் ஆழ்ந்து கற்றுத் தேற வேண்டும். சங்ககால இலக்கி யங்கள்தான் இன்றைக்கும் ஒரு பெரிய ஊற்றுக் கண்ணாக இருந்து கொண்டே இருக்கின்றன. ஒருவன் சிறந்த இலக்கி யவாதியாக ஆக வேண்டும் என்றால் தொல்காப்பியம் முதல் இன்றுள்ள இலக்கியங்கள் வரை ஆழமாகப் படித்து விமர்சன ரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதன் சாராம்சத்தை உள்வாங்கிக்கொண்டு நவீன இலக்கி யங்களைப் படைக்க வேண்டும். இவையெல்லாம் படிக்கா மல் இருக்கின்ற கவிஞனுக்கு சொல்லின் வல்லமை கைகூடாது. சமுதாய அமைப்புகள் தொடர்ந்து மாறிவந்தா லும் சில குறிப்பிட்ட மனிதப்பண்புகள் ஒரு நூலைப்போல அறுந்துவிடாமல் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கிறது. இதுதான் இலக்கியத்தின் ஜீவநாடியாக இருக்கிறது. இந்த அடிப்படையான மனிதப் பண்புகளை இன்றைக்கும் உயர்த்திப் பிடிக்க வேண்டும். உதாரண மாக செய்குத்தம்பி பாவலரிடம் புதிய தம்பதிகள் வந்து வாழ்த்துக் கேட்டபொழுது அவர் சொன்னார்: “இளைஞனே உன் மனைவியுடைய கருநீலக்கூந்தலை எவ்வளவு அன்போடு பார்க்கிறாயோ அவருடைய அழகிய விழிகளை எவ்வளவு பூரித்து வர்ணிக்கிறாயோ அவரு டைய வசீகரங்களுக்குள் எப்படி மெய்மறந்து திளைக்கி றாயோ அதேபோல நீண்ட காலத்திற்குப்பிறகு, அவருடைய கூந்தல் நரைத்தப்பின்பும், கண்கள் குழி விழுந்த பின்பும், தேகத்தில் உள்ள தோல் முழுவதும், சுருக்கம் விழுந்த பிறகும், அதே அன்பும். ஆதரவும் காட்ட வேண்டும்” என்றார்.
முதியவர்களை ஆதரவாக கனிவாக கவனித்துக் கொள்கிற மனிதப்பண்புகளை இலக்கியங்கள் பதிவு செய்துகொண்டே வருகின்றன. இந்த அடிப்படையான மனிதப்பண்புகளை குடும்பம் என்ற இந்த அமைப்பை யெல்லாம் தூக்கியெறிய வேண்டும். என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படிச் செய்த முதலாளித்துவ நாடுகள் எல்லாம் இன்று மீண்டும் ‘குடும்பத்திற்குள் செல்’ என்று சொல்ல ஆரம்பித்திருக்கின்றன. உறவுகள் அறுந்து நிராதரவாக நிற்கின்ற மனிதனை முதலாளித்துவ சமூகம் உருவாக்கி இருக்கிறது. இது அடிப்படை குணாம் சத்திற்கே எதிரானது. இது நிலைத்து நிற்காது.
* சங்க இலக்கியம் பற்றிய மார்க்சிய கண்ணோட்டம் என்று தாங்கள் எதைக் கருதுகிறீர்கள்?
எந்த ஒரு மொழியின் பழங்கால இலக்கியமும் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலையை பிரதி பலிக்கும் கண்ணாடியாகத்தான் இருந்திருக்கின்றது. அதில் அடங்கி இருக்கிற செய்தியை இன்றைய கண்ணோட்டத்தோடு பரிசீலிக்கக்கூடாது. அந்தக் காலத்து தன்மைகளை அந்தப்புலவர்கள் பிரதிபலித்தி ருக்கிறார்களா என்ற உரைக்கல்லை வைத்துத்தான் நாம் பார்க்க வேண்டும். இன்றுள்ள தன்மைகளை ஏற்றிவைத்து அதை விமர்சிக்கக்கூடாது. மார்க்சும், ஏங்கெல்சும் கிரேக்க இலக்கியங்களை ஆழமாகப் படித்தவர்கள். அதில் தங்களின் மனதை பறிகொடுத்து நின்றவர்கள் அந்த இலக்கியச் செல்வங் களிலிருந்து பல உதாரணங்களை தங்களின் எழுத்துக் களில் மேற்கோள் காட்டினார்கள். அதே போல் தான் லெனின், மாவோ, ஹோசிமின், ஸ்டாலின் போன்றோரும் சிறந்த இலக்கிய ஞானத்துடனேதான் இருந்திருக்கின்ற னர்.
இந்தப் பாரம்பரியத்தில் வந்த முற்போக்காளர்கள் ஒவ்வொரு மண்ணுக்கும் உரிய பாரம்பரியமான கலை இலக்கியங்களை ஆழ்ந்து பயில வேண்டும். சமயத் தலை வர்களுக்கோ, மற்ற பண்டிதர்களுக்கோ இருப்பதைவிட முற்போக்காளர்களுக்குத்தான் இந்த ஆழ்ந்த புலமை வேண்டும் அப்பொழுதுதான், நம் சொல்லை நாடு கேட்கும் இந்த இலக்கியத்தின் கீற்றுக்களை நாம் போராட் டத்திற்கு கொண்டுவர வேண்டும். இன்னொரு முக்கிய விஷயம். பழங்காலப் படைப்பாளி கள் மாபெரும் மொழி வல்லுநர்களாக இருந்திருக்கின்ற னர். சொல், மொழிகுறித்த அவர்களது ஞானம், அளப்பரிய தாய் இருந்திருக்கிறது. இதையெல்லாம் இன்றுள்ள முற் போக்கு இலக்கியவாதிகள் மனதில்கொள்ள வேண்டும்.
* இந்த நூற்றாண்டின் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் யார்?
முதலில் எனது நெஞ்சில் எழுவது இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த மகாகவிஞன் சுப்பிரமணியபாரதி தான். தேசபக்தி, சோஷலிஸத்தை வரவேற்ற மாபெரும் புதுமை, மாயாவாதத்தை ஏற்காத கடவுள் பக்தி, இது மூன்றுங்கலந்த மிகச்சிறந்த கலவை பாரதி. அன்றைய காலத்தில் இதைவிட புதுமையாக வேறென்ன இருந்தி ருக்க முடியும். அவன் தேச பக்தியைப் பாடியது இயற்கை. சோஷலிசத்தைப் பாடியது மிகவும் முற்போக்கான புதுமை. அநேகமாக இந்தியாவில் அக்காலத்தில் 1917 ரஷ்யப்புரட்சி பற்றி பாடியது பாரதியைத் தவிர வேறு யாரும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அந்த அளவுக்கு புதுமையின் மீது தீவிர வேட்கையும், அதே சமயத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தீவிரமாகக் குரல் கொடுத்த மனவலிமையையும் பாரதியிடமிருந்து இன் றைய கவிஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள்.
* பாரதியை ‘பிராமணக் கவிஞன்’ என்று கூறுகிற குரல் இன்றும் ஒலித்துக் கொண்டு இருக்கிறதே?
இளம் வயதிலேயே காலமான ஒரு சுவிஞன். அதுவும் பிராமணக் குடும்பத்தில் பிறந்த கவிஞன் “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே” என்று எழுதினான் என்றால் இதை விட ஒரு ஜாதிய எதிர்ப்புக்குரல் அன்றைக்கு வேறு எதுவாகவும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு ஜாதிய ஒழிப்பில் அவரது கண்ணோட்டம் தீவிரத்தன்மை வாய்ந்த தாக இருந்தது. பாரதியைப் போய் பிராமணக் கவிஞன் என்று சொன்னால் அதைவிட ஒரு மிகப்பெரிய அபத்தம் ஏதுமில்லை. பாரதியைத் தொடர்ந்து சமூக சீர்திருத்தத்திற்கும், ஜாதியக் கொடுமைக்கும் எதிராக நின்றவர், செயல்பட்ட வர் பாரதிதாசன் அவருடைய ‘உலகப்பன்’ பாடலும், புரட்சிக்களியும் எவ்வளவு சிறந்த சிந்தனையோடு எழுதப் பட்டது என்பது படிக்கிறவர் களுக்கு நன்கு தெரியும். பாரதி பற்றி பாரதிதாசன் வைத்திருந்த மதிப்பீடு தான் மிகச்சரியானது. பாரதி, பாரதிதாசன் இவர்களின் பரிணாம வளர்ச்சியால் பொதுவுடமைக்காக உரக்கக் குரல் கொடுத்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவருடைய கவிதையின் எளிமையும், உள்ளடக்கமும் காலத்தை விஞ்சி பாட்டாளி மக்களுக்காக என்றென்றும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும்.
* இந்த மூன்று கவிஞர்களுக்குப் பிறகு குறிப்பிடும்படியான செல்வாக்கினை ஏற்படுத்திய கவிஞர் கண்ணதாசன் பற்றி?
கண்ணதாசன் ஒரு மாபெரும் கவிஞர், அவரைப் பற்றி ஒரு சரியான மதிப்பீடு தேவை. அதை நாம் செய்ய வேண்டும். அவருடைய பாடல்கள் கோடிக்கணக்கான மக்களின் நாவில் இன்றும் அசைந்துகொண்டிருக்கின் றன. அதற்கு முக்கியக் காரணம் அவருடைய பண்டைய இலக்கியம் பற்றிய ஞானம். அதையெல்லாம் திரைப்பாட லுக்கு சாதகமாக அவர் மாற்றிக்கொண்டார். உதார ணத்திற்கு வாராயோ தோழி வாராயோ’ பாடல் இருக்கி றது. இது வைஷ்ணவ இலக்கியத்திலிருந்து எடுக்கப் பட்டது. எனவே தான் நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். சங்க இலக்கியங்களைப் படிக்காவிட்டால்நாம் வற்றிப்போய்விடுவோம். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நம்மால் முன்னேற முடியாது. அதைவிட முக்கியம் அந்த எளிமை என்பது இன்றைய நவீன இலக்கியத்திற்கு முக்கியமாகத் தேவைப்படுகிறது.
* சுதந்திரப் போராட்டத்தில் கலை இலக்கியத்தின் பங்கு என்ன?
சுதந்திரப் போராட்டத்தில் கலை இலக்கியத்தின் பங்கு மிக முக்கியமானது. தமிழகத்தில் பாரதியார் பாடல்கள் மாபெரும் சுதந்திர எழுச்சியை ஊட்டின. இரவீந்திரநாத் தாகூரின் குரல் வங்காளம் முழுமையும் அசைத்தது. இதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் இலக்கியவாதி களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. தமிழகத்தில் குறிப்பாக நாடகத்துறையின் பங்கு மிகவும் பிரம்மாண்டமானதாக இருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து குரல் கொடுக்காத நாடகக் கலைஞனே இல்லை. பென்று சொல்லு மளவுக்கு ஒரு காலம் இருந்தது போடப்படுவது புராண நாடகமாக இருக்கும். அதில் எதிரியை வர்ணிப்பது போல பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வர்ணித்துக் கொண்டி ருப்பார் விஸ்வநாததாஸ். இதேபோலத்தான் கே.பி.ஜானகியம்மாள், கே.பி.சுந்தராம்பாள். டி.கே.சண்முகம், என்.எஸ்.கிருஷ்ணன் இன்னும் எத்த னையோ நாடகக்கலைஞர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யத்தை எதிர்த்து உக்கிரத்தோடு கலைச்சேவை செய்துவந்தார்கள் அநேகமாக எல்லோரும் தேசிய இயக்கத்தில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். இவர்கள் கதர்தான் அணிவார்கள்.
* நாடகம், சினிமாத்துறைகளில் பிற அரசியல் இயக்கத்தினர் நுழைந்த அளவுக்கு இன்னும் கம்யூனிஸ்டுகள் நுழையவில்லையே?
நாடகம், சினிமாத்துறைகளில் முற்போக்கு வாதிகள் திட்டமிட்டு உள்ளே நுழையவேண்டும். அது மிகப்பெரிய தேவை. “நீ என்னை கம்யூனிஸ்ட் ஆக்கி” என்ற நாடகம் கேரள கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு செய்த சேவை அளப்பரியது; அப்படிப்பட்ட முழு நீள நாடகம் இங்கு உருவாகவில்லையே என்பதுதான் என்னுடைய கவலை. இரண்டாவது, நாடகம். சினிமாத்துறையில் ஏற்கெனவே இருக்கக்கூடியகலைஞர்களை அரசியல்படுத்த வேண்டும். அவர்களை ஒரு சரியான கொள்கைக்கு கொண்டுவரவேண்டும்.
* தேசிய இயக்கத்திலும், கம்யூனிச இயக்கத்திலும் ஒரு காலத்தில் மானவர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. இன்று அப்படி இல்லையே ஏன்?
தேசிய விடுதலை இயக்கத்தில் மாணவர்க ளின் பங்கு மகத்தானதாகும். ஆயிரக்கணக்கான மாணவர்கள் நகரந்தோறும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து களத்தில் இறங்கினர். அன்று மாணவர்கள் மத்தியிலிருந்து ஒரு முக்கிய முழக்கம் நாடெங்கும் வலம் வந்தது, “நாங்கள் வேலைக்காக போராடுபவர்கள் அல்ல. சுதந்திரத்திற்காகப் போரா டுபவர்கள்” என்பதுதான் அந்த முழக்கம். 1940களில் மதுரை, அண்ணாமலை, சென்னை ஆகிய நகரங்களில் மட்டுமே 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் “பாதுகாப்புக் கைதி”யாக இருந்தார்கள் என்று வரலாற்றில் செய்தியாகும். அன்றைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இன்று தமிழ் நாட்டில் மாணவர் இயக்கம் மிக பலவீனமாகவே இருக்கிறது. இதனைக்களைய முயல வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள் பல நச்சுக் கருத்துக்களுக்கு இரையாவார்கள்.. தங்கள் சொந்த நலனைவிட தேச நலனை முக்கியமாக நினைப்பவர்களை “படி! போராடு!” என்ற கொள்கையை மையமாகக் கொண்டு திரட்ட வேண்டும்.
* இலக்கியவாதிகளிடம் இன்று மார்க்சிஸ்ட் கட்சி என்ன எதிர்பார்க்கிறது?
இலக்கியவாதிகள் அற்புதமான படைப்பு களை தமிழகத்திற்கு வழங்க வேண்டுமென்று முதலில் எதிர்பார்க்கிறது. அதேநேரத்தில் அத்தோடு நின்று விடக்கூடாது. மக்கள் போராட்டத்தில் அவர வர் சக்திக்கேற்ப பங்கேற்க வேண்டும். இதுவரை நடந்த வரலாறு நமக்கு என்ன சொல்லியிருக்கிறது? எத்தனையோ நாடுகளில் எண்ணற்ற கவிஞர்கள் ஜனநாயகத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும். ஆயுதந்தாங்கி போராடி இருக்கிறார்கள். பாசி சத்தை எதிர்த்து மகத்தான குரல் கொடுத்த சார்லி சாப்ளினில் தொடங்கி, “நைட்டிங்கேள் ஆப் இந்தியா” என்று அழைக்கப்பட்ட சரோஜினி தேவி வரை போராட்டத்தில் களம் கண்ட இலக்கிய வாதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்தப்பட்டியலில் தமிழக இலக்கியவாதிகளின்பெயர்களும் இடம்பெறவேண்டும் ஒரு ‘தங்கக்கோபுரத்தில்’ உட்கார்ந்து கொண்டு கனவில் மிதந்தால்மட்டும் போதாது. எதார்த்த வாழ்க்கைக்காககுரல் கொடுக்க வீதியில் இறங்கும்துணிச்சலுடனும் இலக்கியவாதிகள் திகழவேண்டும்.
* தியாகம், தூய்மை, போராட்டம் என்பவற்றை மூலதனமாக வைத்து நடத்தப்படுகிற அரசியலை, கவர்ச்சியை மூலதனமாக வைத்து நடத்தப்படும் அரசியல் அடித்துக்கொண்டு போய்விடுமோ?
இதே கவர்ச்சியும், போலித்தனங்களும் இருந்த கேரளாவில் எப்படி நாம் ஜெயித்தோம்? திரிபுராவில், மேற்குவங்காளத்தில் எப்படி நாம் வெற்றி பெற்றோம்? அடிப்படை வர்க்கங்களை எப்படி நாம் திரட்டினோம். அதுபோல தமிழகத்திலும் தொழிலாளிகளையும், விவசாயிகளையும் அமைப்பு ரீதியாக சித்தாந்த ரீதியாகத் திரட்டினால் அது ஒருமாபெரும் புயல் காற்றாகும். அதற்கு முன் இந்த சுவர்ச்சியெல்லாம் நிற்காது.
* உலகம் முழுவதும் பாட்டாளி வர்க்கத்தின் ஆதர்சமாக இருந்த சோவியத் யூனியன் தகர்ந்தபொழுது, தனி மனிதன் என்ற முறையில் அந்த இழப்பை எப்படி நீங்கள் உள்வாங்கிக் கொண்டீர்கள்?
சோவியத் வீழ்ச்சியைப் பொறுத்தவரை கொஞ்சம் கூட பாதிப்பு கிடையாது எனக்கு மட்டுமல்ல; மார்க்சிஸ்ட்கட்சிக்கே அது கிடையாது. ஏனென்றால், அங்கு ஏற்பட்ட கோளாறு நடைமுறையில் ஏற்பட்ட தவறுதானேயொழிய சோசலிசம் என்கிறதத்துவத்தின் தவறு கிடையாதுஎனவே சோவியத் வீழ்ச்சி என்ற விஷயத்தில் “தனிமனிதன்” என்றபிரச்சனையே கிடையாது. வறுமை இல்லாமல் இருப்பதுதான் அடிப்படை மனித உரிமை “அதை மனிதன் என்றும் விட்டுக்கொடுக்க மாட்டான்”. அதற்காக அவன் போராடுவான். அந்தப் போராட்டம் இன்று அங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
* மாணவப் பருவத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அரசியல் அனுபவங்கள் பற்றிட...
நதியை அறிய வேண்டுமென்றால்உள்ளே குதித்து விட வேண்டியதுதான். வெறுமனே கரையில் நின்று கொண்டு போகிறவன் வருகின்றவனிடம் கேட்டுக்கொண்டே இருந்தால்ஆயிரம்வருடமானாலும், நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடியாது. விடுதலைப்போராட்டம் என்பதும் அப்படித்தான், எனவே அதில் தீவிரமாக ஈடுபட்டேன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் என்னையும், சுதந்திரப்போராட்டத்தில்இறங்கிய மற்றும் சிலரையும் நீக்குவதாக கல்லூரி முதல்வர் அறிவித்தார். உடனடியாக நாங்கள், மாணவர்களைத் திரட்டி ஸ்டிரைக் செய்வோம் என்றுஅறிவித்தவுடன் பயந்துபோய் உத்தரவை வாபஸ் பெற்றுக் கொண்டார். நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தோம். அப்பொழுது பத்தாவது நாளில் கார்க்கியின் ‘தாய்’ நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். இந்தக்காலத்தில்தான் புதுமைப்பித்தனின் கதைகளை நான் விரும்பிப் படித்தேன். அந்தக்கதைகள் எனக்குள் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. புதுமைப்பித்தன் கதைகளின் எளிமையும் வெளிப்பாடும் மிக உயரியது.
போருக்கும், இயக்கத்திற்கும்ஏறக்குறைய ஒரே தலைமைப் பண்புகளே தேவைப்படுகிறது. அதை நாம் வகையான வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் மதுரை சிறையில் இருந்தபொழுது, என் அம்மா வந்து பார்த்த நாட்கள் மிகவும் கஷ்டத்தை உண்டுபண்ணியவை. ஆனால் அதையெல் லாம் தாண்டி மனிதனுக்கு தெளிவு வேண்டும். இல்லையென்றால் இடையிலேயே நின்றுவிடுவோம்.
* தமிழகத்தில் மார்க்சிய சிந்தனையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
“உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின், வாக்கினிலே ஒளி உண்டாம்”. நான்மிக ஆழமாக நம்புகிற வரிகள் இவை உள்ளத்தில் உண்மையும், தெளிவும்இருந்தால்தான்வாக்கினில் அது வெளிப்படும். இது மார்க்சிஸ்டுகளுக்கு மிகவும் பொருந்தும். ஏன் என்றால் உண்மையான தத்துவத்தின்பால் உள்ளத்தை பறிகொடுத்தவர்கள் மார்க்சிஸ்டுகள். அவர்களால்தான் ஈடு இணையற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். அவர்களுடைய வாக்கின் ஒளியில் நம் தேசத்தின் இருட்டு மறையும் நாள் வெகுதொலைவில் இல்லை.