12ஆம் வகுப்பு வரையில் அதிக முக்கியத்துவம் இல்லாத பாடங்களாகவே இந்த மொழிப்பாடங்கள் இருந்து விடுகின்றன. 100 மதிப்பெண் வாங்கியவர்கள் பட்டியலிலும் மொழிப்பாடங்களில் வாங்கியவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். “இதுல எல்லாம் அவ்வளவு போடமாட்டாங்கள்ல” என்று தோள்களை உலுக்கிச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்கள். ஆனால், போட்டித் தேர்வுகளுக்கு மொழிப்பாடங்கள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன. டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் 100 வினாக்கள் மொழிப்பாடத்தில் இருந்து கேட்கப்படுகிறது. ஒன்றிய அரசுப் பணியிடங்களுக்கான தேர்வுகளில் ஆங்கிலம் பிரதானமாக இருக்கிறது. வங்கித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பிறகு, உள்ளூர் மொழித் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றால்தான் எழுத்தர் போன்ற பணியிடங்களில் அமர முடியும். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆவதற்கான யு.பி.எஸ்.சி. தேர்வின் முதல் கட்டத்தில் CSAT தேர்வு உள்ளது. அதில் அடிப்படை ஆங்கிலம் அவசியமாகும். அதேபோன்று, முதன்மைத் தேர்வில் இந்திய மொழிகள் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து ஒரு தாளை எழுத வேண்டும். இப்படியாக, மொழிப்பாடங்கள் மிக முக்கியமானவை என்று பள்ளிக்கூடத்தை விட்டு வெளியில் வந்தபிறகுதான் உணர முடிகிறது. சிலர் டி.என்.பி.எஸ்.சி. போன்ற தேர்வுகளை எழுதும் நோக்கத்தில் பி.ஏ. தமிழ் எடுத்துப் படிக்கிறார்கள். பி.ஏ. ஆங்கிலமும் சிலர் எடுக்கிறார்கள். ஆசிரியப்ணியைத் தேர்வு செய்யவும் மொழிப்பாடங்களை உயர்கல்வியில் தேர்வு செய்வது உதவும். ஒரு விஷயத்தை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும். இதுவரை படித்த மொழிப்பாடங்களில் இருந்துதான் போட்டித் தேர்வுகளில் வினாக்கள் இடம் பெறும். ஏற்கனவே படித்ததை மறந்துவிடாமலும் இருக்க வேண்டும்.