tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு முகாம்

கும்பகோணம், மே 29-  கும்பகோணம் அரசினர் ஆண்கள் கலைக் கல்லூரியில்(தன்னாட்சி), நான் முதல்வன் திட்டத்தின் சார்பாக, 30 தனியார் நிறுவனங்களைக் கொண்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.  இதில், தஞ்சை மாவட்டத்தின் சார்பாக கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி, அரசு மகளிர் கலைக் கல்லூரி, இதயா மகளிர் கல்லூரி, மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில், குடவாசல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கூத்தாநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் மஞ்சக்குடி தயானந்தா கல்லூரியைச் சார்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றனர். இவர்களிடம், நேர்காணல் நடத்தப்பட்டதில் 438 மாணவ மாணவிகள் தேர்வு பெற்று பல்வேறு நிறுவனங்கள் மூலமாக பணி நியமன கடிதம் பெற்றனர். இவ்வேலைவாய்ப்பு முகாம், கல்லுாரி பொறுப்பு முதல்வர் சீ. தங்கராசு  தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் சா.சரவணன், கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர்  தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் துறைத்தலைவர்கள் சிறப்பாக நடத்தினர்.

அனுமதியின்றி இயங்கிய  குடிநீர் ஆலைக்கு ‘சீல்’

கும்பகோணம், மே 29-  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, வளையப்பேட்டையில், அனுமதியின்றி இயங்கிய குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கும்பகோணம் அருகே, வளையப்பேட்டை ஊராட்சியில், நீர்வளத் துறையிடம் உரிய அனுமதி பெறாமல், பெரிய அளவில் மூன்று ஆழ்துளை கிணறு அமைத்து வணிகரீதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக விற்பதாக உதவி ஆட்சி யருக்கு புகார் வந்தது. இதன்பேரில், உதவி ஆட்சியர் ஹிருத்யா எஸ். விஜயன் தலைமையில் வட்டாட்சியர் சண்முகம் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் அந்தக் குடிநீர் ஆலையை ஆய்வு செய்ததில் ஆலை அனுமதியின்றிச் செயல்பட்டது தெரியவந்தது. மேலும், ஆழ்துளை கிணற்றிலிருந்து டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் பிடித்து வெளியிடங்களுக்கு எடுத்துச் சென்று விற்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆலையை அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி 21 ஆவது வார்டில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், நகர்மன்ற ஆணையர் துர்கா, நகர்மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.

இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்  திட்டத்தின்கீழ் வைப்புத் தொகை வழங்கல்

மயிலாடுதுறை, மே 29-  மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம், மணக்குடி கிராமத்தில் சமூக நலத்துறையின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளியை “நிறைந்தது மனம்” என்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கலந்துரையாடி, ரூ.50 ஆயிரத்திற்கான வைப்புத் தொகை ஆணையை வழங்கினார். இத்திட்டத்தின் கீழ், இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு, ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25,000 தமிழ்நாடு மின்மிசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இறுதி முதிர்வுத்தொகை 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே இறுதி முதிர்வுத் தொகை அப்பெண் குழந்தைக்கு வழங்கப்படும். அவ்வாறு இல்லை எனில், வட்டியுடன் சேர்ந்த வைப்புத் தொகை அரசுக் கணக்கில் செலுத்தப்படும். 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகளுக்கு முதிர்வு தொகை பெற வேண்டுமாயின், மாவட்டத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.  இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, 40 வயதுக்குள் பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளவும் கூடாது. விண்ணப்பிக்கும்போது பெற்றோர், அவர்களின் பெற்றோர்கள் தமிழகத்தில் பத்தாண்டுகள் வசித்தவராக இருத்தல் வேண்டும். இரண்டாவது குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இத்திட்டம் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ஒரு குழந்தைக்கு தலா ரூ.25,000 வீதம், இரண்டு பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரத்திற்கான வைப்புத் தொகை ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கி, இத்திட்டத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பயனாளிக்கு அறிவுரை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல அலுவலர் சுகிர்தா தேவி மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திமுக துணைப் பொதுச்செயலாளர்  ஆ. ராசா.எம்.பி. மனைவி நினைவு தினம்!

பெரம்பலூர், மே 29-  பெரம்பலூர் மேனாள் ஒன்றிய அமைச்சர், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா.எம்.பி. மனைவி, மறைந்த மு.அ. பரமேஷ்வரியின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் உள்ள அவரது சமாதியில் ஆ.இராசா.எம்‌பி., அரசு தலைமை கொறடா பா.ராமச்சந்திரன், பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.க‌‌. கண்ணன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்‌.பழணியாண்டி, ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.  இந்த நிகழ்ச்சியில், குடும்ப உறுப்பினர்கள் மயூரிராசா, ஆ.ராமச்சந்திரன், ஆ.கலியபெருமாள், ஆ.சிவசண்முகம், வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகை சிவசண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். செல்லத்துரை, ஏ.கே. ராஜேந்திரன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.