tamilnadu

img

சமரசமற்ற, விரிவான மதச்சார்பற்ற அணி அவசியம்

அரசு ஒன்றை அமைக்கக் கூடிய அணி என்பது கடந்த காலங்களில் தேர்தலுக்கு பின்னர்தான் அமைந்தது. இதுதான் வரலாறு. வரும் தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகளை பலப்படுத்துவதற்கான முன்முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுவோம். 

இ.கே.நாயனார் நகர்(கண்ணூர்), ஏப். 7 - பாஜகவின் மதவாத அரசியலை எதிர்த்துப் போராடுவதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாத, விரிவான  மதச்சார்பற்ற அணியை உருவாக்கு வது அவசியம் என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார்.  கண்ணூரில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் அரசியல் நகல் தீர்மானத்தை தாக்கல் செய்து உரையாற்றிய கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி, அதன் சாராம்சம் குறித்தும் பிரதிநிதிகளின் விவாதம் தொடர்பாகவும் வியாழ னன்று மாலை மாநாட்டு வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு புத னன்று (ஏப். 6) தொடங்கி 2ஆவது நாளாக வியாழனன்றும் (ஏப். 7) நடைபெற்று வரு கிறது. ஏப்ரல் 6 அன்று பிற்பகல் மாநாட்டில் அரசியல் நகல் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது பிரதிநிதிகளின் விவாதம் நடைபெற்று வருகிறது.

கட்சியில் ஜனநாயக முறைப்படி அரசியல் நகல் தீர்மானம் மாநாடு நடை பெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே நாடு முழுவதும் அனைத்து  கிளை மட்டங்களிலும் விவாதிக்கப் பட்டு, மாநாடு துவங்குவதற்கு முன்பு  வரை 4,001 திருத்தங்கள் வந்துள் ளன. அதில் சில திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. பெரும்பாலான திருத்தங்கள் கட்சியை மேலும் வலுப் படுத்துவது குறித்ததாக இருந்தன. எங்கள் முன் சில முக்கியமான சவால்கள் தற்போது உள்ளன. நாட்டில் உள்ள உழைக்கும் மக்களின் நலன் களை பாதுகாக்கவும், இந்திய அர சியல் சாசனத்தை சீர்குலைக்கும் மற்றும் சிறுமைப்படுத்தும் பாஜகவை வரும் மக்களவை தேர்தலில் தனிமைப்படுத்தி தோற்கடிப்பது அவசியம் எனக் கருது கிறோம். எனவே இதற்கான பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க இடது சாரி மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம். பாஜக அரசுக்கு எதிராக மாற்றுத்திட்டங்களை ஏற்க முன்வரும் கட்சிகளையும், அமைப்புகளையும் இணைத்து விரிவான மதச்சார்பற்ற அணியை உருவாக்குவது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம். இந்த  அம்சங்கள்  ஒருசேர நடை பெற வேண்டும். இதற்கான பணி களை திட்டமிடும் வகையில் மாநாட்டில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. இந்நிலையில் ஒன்றிய பாஜக அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு  விலை உயர்வு உட்பட மக்களை  பாதிக்கும் முக்கியமான பிரச்சனை களில் இருந்து மக்களை திசை திருப்ப முன்பு ஹிஜாப் பிரச்சனையை எழுப்பி னார்கள், இப்போது ஹலால் பிரச்ச னையை எழுப்புகிறார்கள்.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அவற்றின் மீதான கூடுதல் வரிகளை உடனடியாக திரும்பப் பெறக் கோரி யும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.  வருவாயை திரட்டு கிறோம் என்ற பெயரில் ஒன்றிய அரசு  நாள்தோறும்  பெட்ரோல், டீசல் விலை களை உயர்த்தி  உழைக்கும் மக்கள் மீது மென்மேலும் சுமைகளை ஏற்றி வரு கிறது. இது ஒருபுறம் இருக்க மறு புறம் செல்வந்தர்களுக்கும், பெரு நிறு வனங்களுக்கும் வரிச்சலுகைகளை வாரிவழங்கி வருகிறது. 40 கட்சிகள் வாழ்த்து மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய  மாநாட்டிற்கு சர்வதேச அளவில் 40  கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி கட்சிகளி டமிருந்து வாழ்த்துக் கடிதங்கள் வந்துள் ளன. அக்கட்சிகளுக்கு மாநாட்டின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன். புதிய தாராளமய கொள்கை களை முறியடிக்கவும், அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் சீர்குலைவு முயற்சிகளை வீழ்த்தவும், உலகம் முழுவதும் உள்ள  கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி கட்சி களின் ஒற்றுமை அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம். இவ்வாறு யெச்சூரி கூறினார். அதன் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், அதிகரித்து வரும் இந்துத்துவா சவால்களை முறியடிக்க காங்கிரஸ் கட்சி அல்லாத அணியால்   முடியும்  என்று நீங்கள் கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “அப்படி நாங்கள் ஒருபோதும் கருத வில்லை. அதேநேரத்தில் பாஜகவின் மத வாத அரசியலை எதிர்த்துப் போராட எந்த சமரசமும் செய்து கொள்ளாத மதச்சார்பற்ற கட்சிகளால் மட்டுமே அந்த சவாலை எதிர்கொள்ள முடியும் என்று நாங்கள் கருதுகிறோம். காங்கிரஸ் கட்சியிலிருந்து நாள்தோறும் பல தலைவர்கள் பாஜக பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள். இதை நாங்கள் மட்டுமல்ல நாட்டு மக்களும் விரும்பவில்லை” என்றார்.

தேர்தலுக்குப் பிறகு...

வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மதச்சார்பற்ற கட்சிகளின் அணி  சேர்க்கை உருவாக வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, “எங்களைப் பொறுத்தவரை வரும் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகளை அதிகளவில் அணி திரட்டு வோம். கடந்தகால அனுபவங்களைப் பார்க்கும் போது தேர்தலுக்கு பின்பு தான் மதச்சார்பற்ற அணிகள் உருவாகி அரசுகள் அமைந்துள்ளன. வி.பி.சிங் தலைமையில் அரசு அமைக்கப்பட்ட போது அதற்கான கூட்டணி தேர்த லுக்குப் பின்னர்தான் உருவானது. இடது சாரிகள் ஒரு பக்கமும், மறுபக்கம் பாஜகவும் அவரது அரசை ஆதரித்தன. இதேபோன்று 1977ஆம் ஆண்டும் இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்ட பின்னர் மொரார்ஜி தேசாய் தலைமை யிலான அரசும், அதற்கான அணியும் தேர்தலுக்கு பின்னர்தான் உருவானது. 1998ஆம் ஆண்டு மக்களவை தேர்த லுக்கு பிறகுதான் வாஜ்பாய் தலைமை யில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தது. அப்போது அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் அந்த அரசை தொடர்ந்து காப்பாற்ற முடியவில்லை. 2004 ஆம் ஆண்டும்தேர்தலுக்கு பின்னர் தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உரு வானது. அந்த அரசுக்கு இடதுசாரிகள் ஆதரவு அளித்தனர். வரும் 2024ஆம் ஆண்டும் தேர்தலுக்கு பின்னர்தான் அணி சேர்க்கை உருவாகும். எனினும் தேர்தலுக்கு முன்பு 3ஆவது அணி, 4ஆவது அணி என பல அணிகள் உரு வாகலாம். ஆனால் அரசு ஒன்றை அமைக்கக்  கூடிய அணி என்பது கடந்த காலங் களில் தேர்தலுக்கு பின்னர்தான் அமைந் தது. இதுதான் வரலாறு. வரும் தேர்த லிலும் பாஜகவுக்கு எதிராக மதச்சார் பற்ற கட்சிகளை பலப்படுத்துவதற்கான முன்முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடு வோம். ஏற்கனவே தமிழ்நாடு, அசாம்,  பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநி லங்களில் இதற்கான அணி சேர்க்கை உருவாகி உள்ளது” என்றும் யெச்சூரி சுட்டிக்காட்டினார். பேட்டியின் போது கண்ணூர் மாவட்டச்செயலாளர் எம்.வி.ஜெய ராஜன் உடன் இருந்தார்.