தஞ்சாவூர், ஏப்.27 - தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீர்வளத்துறை சார்பில், 2023-24-ஆம் ஆண்டிற்கான தூர்வாரும் பணி மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமை வகித்தார். இதில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாகவும், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்கள் காணொலிக்காட்சி வாயிலாகவும் பங்கேற்றனர். அப்போது கூடுதல் தலைமை செயலாளர் கூறுகையில், ‘‘நீர்வளத்துறை சார்பில் 2023-24-ஆம் ஆண்டிற்கு 182 வாய்க்கால் மற்றும் வடிகால் தேர்வு செய்யப்பட்டு, ரூ.19 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியானது மே 31- ஆம் தேதிக்குள் முடிவடையும். தூர்வாரும் பணிகள் நடைபெறும் விவரங்களை சிறப்பு செயலியில் பதிவேற்றப்பட்டு பணிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். தஞ்சை மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் நல இயக்குனர் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து பணிகளும் விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்’’ என்றார். கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.