நாமக்கல், ஜூன் 19- ராசிபுரம் அருகே தறிப்பட்டறையை காலி செய்ய மறுத்த பெண்ணின் வீட்டை சூறையாடிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் (55) – ராணி (50) தம்பதியினர், கடந்த 30 வருடங்களுக்கு முன்பு குமாரபாளையம் பகுதியில் பிழைப்பிற்காக குடியேறி வசித்து வருகின்றனர். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு குமாரபாளையம், ஆலங்காட்டு வலசை பகுதியில் தனிநபர் ஒருவருக்கு சொந்தமான தறிப்பட்டறைக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் முன் பணமாக செலுத்தி, ஒப்பந்தம் செய்து இரண்டு மகன், மருமகள், பேரக்குழந்தையுடன் தங்கியிருந்து தறிப்பட்டறையினை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வருடமாக தர்மலிங்கத்தின் இரண்டாவது மகன் அருண்குமார் (27), ஒட்டன்கோவில் பகுதியிலுள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தறிப்பட்டறையில் வேலை செய்து வந்த நிலையில், பணியின்போது மின்சாரம் பாய்ந்து அவர் இறந்துள்ளார். அதைத்தொடர்ந்து அருண்குமாரின் மனைவி புவனேஸ்வரி, கணவர் இறந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட தறிப்பட்டறை உரிமையாளர் மீது நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், தர்மலிங்கம் ஒப்பந்தம் எடுத்த விசைத்தறிக் கூடத்தின் உரிமையாளரும், அருண்குமார் வேலை செய்த விசைத்தறிக்கூட உரிமையாளரும் ஒரே சங்கத்தில் உள்ளதால், புவனேஸ்வரியிடம் வழக்கை திரும்பப்பெற சொல்லி மிரட்டியுள்ளதாக தெரிகிறது. அதற்கு புவனேஸ்வரி சம்மதிக்காததால் கடந்த சில மாதங்களாக தர்மலிங்கம் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்த விசைத்தறி கூடத்தை காலி செய்யச் சொல்லி, பல்வேறு விதத்தில் அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து ராணி குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, 2 மாதத்திற்கு முன்பு இரு தரப்பினரையும் போலீசார் நேரில் அழைத்து சமரசம் செய்து அனுப்பினர். ஆனால், சிறிது நாட்கள் அமைதியாக இருந்த விசைத்தறிக்கூட உரிமையாளர்கள் மீண்டும் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த குடும்பத்தினர், முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த விசைத்தறிக்கூட உரிமையாளர்கள் கும்பலாக சென்று, தர்மலிங்கத்தின் வீட்டின் பூட்டை உடைத்து, பொருட்களை எடுத்து வீதியில் வீசினர். மேலும், வீட்டின் மேற்கூரை ஓடுகளை கழற்றி உடைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த புவனேஸ்வரி மானபங்கம் செய்ய முயன்றனர். சுதாரித்துக் கொண்ட அவர் தனது செல்போனை எடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கும்பல் செல்போனை பிடுங்கிக் கொண்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. மேலும், அந்த கும்பல் தாக்கியதில் புவனேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மயங்கி கிடந்தவரை உறவினர்கள் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், குமாரபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வீட்டை இழந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் பொருட்களுடன் வீதியில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டை சூறையாடிய அந்த கும்பல் மீதும், விசைத்தறிக்கூட உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.