படப்பை குப்பை கிடங்கு அடிக்கடி தீ பற்றி எரிவதால் சூழல்மாசு
குன்றத்தூர், ஜூன் 22- படப்பை ஊராட்சியில் குவிக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பற்றி எரிவதால் அப்பகுதியில் சூழல்மாசு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் வட்டத்திற்கு உட்பட்ட படப்பை ஊராட்சியில், 4000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில், தினமும் சேகரிக்கும் குப்பைகளை புஷ்பகிரி சாலையில் மலை போல் கொட்டிக் குவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக், இறைச்சி கழிவுகள், காய்கறி கழிவுகள் அதிகம் கொட்டப்படுவதால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. படப்பை ஊராட்சியில் குப்பை அகற்றும் காந்த வெப்ப சிதைவு இயந்திர கூடம் கடந்த 2022ம் ஆண்டு திறக்கப்பட்டும், பயன்பாடின்றி உள்ளது. இதனால், குப்பை கிடங்கில் நாளுக்கு நாள் குப்பையின் அளவு மலை போல் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்த குப்பையை அழிக்க, ஊராட்சி நிர்வாகம் அடிக்கடி தீ வைத்து எரிப்ப தாக பொதுமக்கள் குற்றம்சாட்டு கின்றனர். குப்பையில் இருந்து வெளியேறும் புகை, குடியிருப்பு பகுதியை சூழ்வதால், படப்பை மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் குப்பை கிடங்கில் வைக்கப்பட்ட தீ அணைக்கப்படாத தால், ஒரு மாதத்திற்கும் மேலாக புகை வெளியேறியபடி இருந்தது. இந்நிலையில், மீண்டும் குப்பை எரிந்து கரும்புகை சூழ்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு மூச்சு திணறல் சுகாதாரக் கேடு போன்ற பிரச்சனைகள் ஏற்படக் வடும் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். காந்த வெப்ப சிதைவு இயந்திரம் சீர்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவந்து, ஊராட்சி நிர்வாகம் குப்பையை முறையாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.