நாமக்கல்,பிப்.22- திருச்செங்கோடு நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி 222 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 23-வது வார்டில் அதிமுக முன்னாள் எம்எம்எல்ஏவான பொன்.சரஸ்வதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் புவனேஸ்வரி என்பவர் போட்டி யிட்டார். வாக்கு எண்ணிக்கை யின்போது மொத்தம் 1931 வாக்குகள் பதிவாகின. இதில் திமுக வேட்பாளர் புவனேஸ்வரி 1,061 வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டி யிட்ட முன்னாள் எம்எல்ஏ பொன். சரஸ்வதி 839 ஓட்டுகள் பெற்றார். இதன்படி அதிமுக வேட்பாளரைக் காட்டிலும் 222 ஓட்டுகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் புவனேஸ்வரி வெற்றி பெற்றார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை தழுவிய பொன்.சரஸ்வதி கடந்த 2011-2016ம் ஆண்டு வரை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவராக இருந்தார். அதன்பின் 2016-2021 வரை திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல் வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் மகன்கள் வெற்றி ஆவடி மாநகராட்சி 4ஆவது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மகன் ஆசிம்ராஜா போட்டியிட்டார். மொத்தம் பதிவான 910 வாக்குக ளில் ஆசிம்ராஜா 755 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ரமேஷ் 129 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 15 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். அதேபோல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி 7ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் மஸ்தான் மகன் மொக்தியார் மஸ்தான் 719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.