tamilnadu

img

சட்டமன்றத்தை மதிக்காத போக்கு என்ன ஜனநாயகம்?

சென்னை,மார்ச் 24- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு வியாழனன்று (மார்ச் 24) அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார். அவர் பேசுகையில், 2022-23 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் மீது நடந்த விவாத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்கள் பலரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். சிலர் ஆலோசனைகளையும் வழங்கினர். குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எம். சின்னதுரை பேசும் போது காவிரி- குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.  அவரது கோரிக்கையை ஏற்றுள்ள அரசு  ரூ.281.1 கோடி மதிப்பீட்டில் அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றார். ஏழைகளுக்கு என்ன திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது எதிர்க் கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பிய கேள்விக்கு எனது பதில், பழங்குடி இனத்தை சேர்ந்த இருளர்களுக்கு 1000 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மேலும், மாநிலம் முழுவதும் 4,848 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டிதரப்படும். இது முழுக்க முழுக்க வறுமைக் கோட்டின் கீழ் வசித்து வரும் ஏழை மக்களுக்கு மட்டுமே என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார ஆலோசனை குழுவின் பணிகள்...

முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் உள்ள 5 பேரும் வெவ்வேறு நோக்கங்களை கொண்ட நிபுணர்களாக இருந்தாலும் நட்புடனும், ஒற்றுமையுடனும் அரசுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்கள். மூன்று மாதத்திற்கு ஒருமுறை முதலமைச்சருடன் காணொலி மூலம் கூட்டம் நடத்துகிறார்கள். இதுமட்டுமல்ல துறைவாரியாகவும் அனைத்து அதிகாரிகளுடனும் கலந்தாய்வு நடத்தி வருகிறார்கள்.  ஆலோசனை குழு உறுப்பினர்கள் 5 பேரும் அரசிடம் ஒரு ரூபாய் கூட வாங்காமல் முற்றிலும் இலவசமாக சேவையாற்றி வருகிறார்கள்.

திறமையற்ற நிர்வாகம்!

முந்தைய அதிமுக ஆட்சியின்போது கொரோனா பெருந்தொற்று இல்லா காலத்திலும் நிதிமேலாண்மையை சரிவரி கையாளவில்லை. இதனால் வருவாய் பற்றாக்குறையும், நிதிப் பற்றாக்குறையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து பெரும் சுமையை உருவாக்கி வைத்துள்ளது. கொரோனா பெருந் தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்திற்கு இடையே ஆட்சிக்கு வந்த திமுக, தனது திறமையான நிதி நிர்வாகத்தால் தற்போது கடன் சுமையை குறைத்து வருவாய் பற்றாக்குறையை குறைத்துள்ளது.

மாடல் மாநிலம்!

பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு வளர்ந்த, வளர்ச்சி பெற்ற மாநிலமாக உள்ளது. தற்போது 90 விழுக்காடு குடும்பங்களுக்கு கிராமப்புறங்களில் சொந்தவீடு உள்ளது. நகரங்களில் 60 விழுக்காட்டினர் சொந்தமாக வீடு வைத்துள்ளனர். அரசு கட்டிக்கொடுத்திருக்கும் குடியிருப்பு 15 விழுக்காடு மட்டுமே. 2 கோடிக்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனம் வைத்திருக்கிறார்கள். ஆனாலும், 52 விழுக்காடு இளைஞர்கள் வேலைத் தேடி வருகிறார்கள். இதில் பெண்கள் அதிகமாக உள்ளனர்.

அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கை

அதே நேரத்தில், முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 15 விழுக்காட்டினர் நகரப்புறங்களில் தனியாக வசித்து வருகிறார்கள். அவர்களில் சிலருக்கு உதவிகள் தேவைப்படுகிறது.  மன நலம் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கு தங்கும் விடுதி, உணவு தேவைப்படுகிறது. ஆனால், சென்னை போன்ற நகரங்களில் வசிக்கும் முதியோருக்கு மாதம் ரூ.2000 வருமானம் கிடைக்கிறது. தருமபுரி போன்ற மாவட்டங்களில் அதுகூட கிடைப்பதில்லை. இப்படி ஏற்றத் தாழ்வுகள் அதிகம் உள்ளது.  முதியோர் உதவித் தொகை, விதவை, ஆதரவற்றோர் உதவித் தொகை வழங்கப்பட்டாலும் உண்மையான ஆதரவேற்றோருக்கு உதவித் தொகை கிடைப்பதில்லை. இதில் உள்ள குறைகளை போக்க  வேண்டியுள்ளது.

வஞ்சிக்கும் ஒன்றிய அரசு!

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதியும் முறையாக கிடைப்பதில்லை. அப்படியே ஒதுக்கினாலும் பணத்தை மாநில அரசிடம் கொடுப்பதில்லை. மாநில அரசின் நிதி சுதந்திரத்தை முற்றிலும் பறித்துக்கொண்டது. ஒன்றிய அரசின் பட்டியலில் நமது மாநிலம் பணக்கார மாநிலமாக உள்ளது. இதனால், நமது மாநிலத்திற்கு நிதி பகிர்வை குறைவாக தருகிறார்கள். நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக ஒன்றிய அரசின் அனுமதிக்காக சட்டம் இயற்றி அனுப்பி வைத்தாலும் ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுப்பதில்லை.  கடந்த பத்து மாத காலத்தில் மட்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 19 சட்டங்கள், தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பி வைத்தும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் அரசாணையும் வெளியிட முடியவில்லை. இது எந்த வகை ஜனநாயகம்?  நாம் போடும் சட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்றால் நீதி நிர்வாகம், சட்டமன்றம் எதற்கு? சட்டமன்றத்திற்கு உள்ள உரிமை என்னாவது? இப்படியே சென்றால் மாநிலத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்காது. இந்த அவமதிப்புக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான்  அரசின் நோக்கம். இதற்காக பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகள் நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு நிதியமைச்சர் பேசினார்.