tamilnadu

img

கல்வி, ஜனநாயகம் மாணவர் சங்கங்கள் - இளங்கோ

நம்ம ஊரில் பள்ளி இறுதி சான்றிதழ் அல்லது மேல் நிலை கல்வி என்று நாம் அழைப்பதை  அர்ஜென்டைனா  நாட்டில் “முதிர்ச்சி நிலை கல்வி” என அழைக்கிறார்கள்.  இப்படத்தின் கதை ஒரு பள்ளியில் நிகழ்வதாக இருக்கிறது.   பள்ளி இறுதி ஆண்டு மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் 36 வயது ஆண் ஆசிரியருக்கும் 16 வயது மைனர் மாணவிக்கும் இடையே ஏற்படுகிற காதலைப் பற்றியம் அதன் விளைவுகளையும் பற்றி  பேசுகிறது படம். மாணவியின் காதலை அவளது தந்தை கடுமையாக எதிர்க்கிறார்.  அதே பள்ளியின் நிர்வாகத்தில் கணக்கு மேலாளராகப் பணிபுரிகிறார் அவர். பள்ளியின் அன்றாட செயல்பாடுகளில் எத்தனையோ பிரச்சனைகள் வருகின்றன.  அதில் ஒன்றாகத்தான் இதையும் கருதுகிறது நிர்வாகம்.  ஆசிரியர் மாணவிக்கு இடையே உருவான காதலை, குறிப்பிட்ட அந்த வகுப்பறையின் பிற மாணவர்கள் உட்பட எல்லோருமே இதைப் பள்ளியின் பிரச்சனையாக மாற்றாமல் தனி நபர்களின் பிரச்சனையாக அணுகுகிறார்கள். 

தந்தையின் கடுமையான எதிர்ப்பை அடுத்து அந்த  மாணவி தந்தையிடமிருந்தும் காதலனிடமிருந்தும் பிரிந்து வாழ்ந்து இது குறித்து ஆழ்ந்து யோசித்து ஒரு முடிவெடுக்கிறாள்.   முதிர்ச்சி என்பது படிப்பில் மட்டுமல்ல வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும் சரியான முடிவெடுக்க வேண்டியதை படம் சுட்டிக்காட்டுகிறது. படத்தின் ஊடாக வரும் ஒரு காட்சிதான் நம்மை அதிகம் ஆராய வைத்துவிட்டது.  மேலோட்டமான தகவல்களிலிருந்து நாமறிந்து கொள்வது என்னவெனில், அர்ஜென்டைனாவில் தேசீய அளவில் பெரும் மாணவர் சங்கங்கள் இருக்கின்றன.  இவற்றில் ஒன்றரைக் கோடி மாணவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.  ஒவ்வொரு மாணவர் சங்கமும் தனக்கேயுரிய சமூக, அரசியல் தத்துவத்தை தேர்ந்தெடுத்துக்கொள்கிற சுதந்திரம் இருக்கிறது.  பல்கலைக்கழக அளவிலிருந்து, தேசஅளவில் ஃபெடரேசன் (Federation) என்றழைக்கப்படுகிற கூட்டமைப்பாக அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக இயங்குகிறது.  பள்ளியில் துறை அளவில் மாணவர் மையம் (Students’ Center) என்ற பெயரில் இவை அனுமதிக்கப்படுகின்றன.  

பள்ளியின் ஒவ்வொரு துறைக்கும் மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளைக் கொண்ட ஒரு மாணவர் மையம் இருக்கிறது. பள்ளியின் மாணவர் மையம் தங்கள் வகுப்பறையில் ஒரு கூட்டம் நடத்துகிறது. அர்ஜென்டைனாவின் பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து, கல்வி குறித்த அவர்களின் கருத்தை, அடுத்த அரசை தாங்கள் அமைத்தால் கல்வித்துறையை மேம்படுத்த நாங்கள் என்ன செய்வோம்? என்று பேச வைக்கிறார்கள். அதன் பின் கேள்வி பதில் அமர்வும் இருக்கிறது.    மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த மாதிரியான அரசியல் முழக்கங்களைக் கொண்ட  பதாகைகளை வகுப்பறையில் வைத்து மகிழ்கிறார்கள். அர்ஜென்டைனா நாட்டில் மாணவர்கள் அரசியலையும், சமூகத்தையும் வகுப்பறையிலிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள் என்ற செய்தி வியப்பூட்டுகிறது.   காதலையும், அரசியலையும் ஒரே பருவத்தில் புரிந்து கொள்ளும் “முதிர்ச்சி நிலை” கல்வி அங்கு கிட்டுகிறது.