tamilnadu

img

ஒன்றிய அரசால் உயரும் மருந்து-மாத்திரை விலை

சென்னை,ஏப்.4- பொது மக்களை பாதிக்கும் மருந்து,மாத்திரை விலை உயர்வை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மருந்து மற்றும் சில மருத்துவ சாதனங்களுக்கான விலையினை 10.76 விழுக்காடு வரை உயர்த்திக் கொள்ள மருந்து நிறுவனங்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இது பொது மக்களை கடுமையாக பாதிக்கும். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், வைட்டமின், ஓஆர்எஸ், பாராசிட்டமால் உள்பட 800க்கும் மேற்பட்ட மருந்துகள் விலை உயர உள்ளது. இந்த மருந்துகளின் விற்பனை என்பது இந்திய உள்நாட்டு மருந்து சந்தையில் 18 விழுக்காடாகும். (இந்திய உள்நாட்டு மருந்து சந்தை மதிப்பு 1.5 லட்சம் கோடியாகும்.)

இந்த மருந்து விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு மொத்த விற்பனை குறியீடு அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறுகிறது. 2021 மொத்த விற்பனை குறியீடு 10.76 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும், இந்த அடிப்படையில் விலை உயர்வுக்கு அனுமதி அளித்துள்ளதாக வும் ஒன்றிய அரசு கூறுகிறது.  2020ல் இந்த மொத்த விலை விற்பனை குறியீடுஎன்பது 1.88ஆகவும், 2019ல் 4.26 ஆகவும், 2018ல் 3.43 ஆகவும், 2017ல் 1.97 ஆகவும் இருந்தது. கடந்த காலங்களுடன் ஒப்பிட்டால் இந்த உயர்வு என்பது பல மடங்கு அதிகமாகும். ஆனால் ஒன்றிய அரசோ தொடர்ந்து விலைவாசி கட்டுக்குள் இருப்பதாக கூறி வருகிறது. தற்போது ஒவ்வொரு குடும்பத்திலும் சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம், மூட்டு வலி போன்ற நோயால் குறைந்தது ஒரு நபராவது பாதிக்கப்பட்டு இருப்பதோடு மாதம் 3000ல் இருந்து 4000 வரை மருந்துக்கு செலவிட வேண்டியுள்ளது. இந்த விலை உயர்வு இவர்களை கடுமையாக பாதிக்கும். உதாரணமாக தற்போது ரத்த அழுத்தத்திற்கு பயன்படும் மாத்திரை பட்டை விலை 75லிருந்து 82.55 ஆகவும், சர்க்கரை நோய்க்கு பயன்படுத்தும் இன்சூலின் போன்ற ஊசிகளின் விலை 20 விழுக்காடு வரை அதிகரிக்கப் போகிறது. இவ்விலை உயர்வுக்கு வெளிநாடுகளில் இருந்து மருந்து மூலப் பொருட்களை இறக்குமதி செய்வது முக்கிய காரணமாகும். இந்தியாவின் மருந்து உற்பத்தியில் 60 விழுக்காட்டிற்கு மேலான மூலப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளித்து வருகிறது. மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மூலக்கூறு மருந்துகள் மற்றும் உற்பத்தி செய்த மருந்துகளை எடுத்து வருவதற்கும், அனுப்புவதற்குமான போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாது மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை வியாபாரம் செய்வதற்கான செலவிடுதலையும் அதிகரித்து கொண்டு வருகிறது.

இத்தனைக்கும் மேல் ஒன்றிய அரசின் தவறான ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக மருந்துகளின் மீதான வரிச் சுமை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வானது சாமானிய மக்களை மட்டுமல்லாது மாநில அரசுகளுக்கும் நிதிச் சுமையை அதிகரிக்க உள்ளது. மாநில அரசுகள் அரசு மருத்துவமனைகளில் தற்போது வாங்கி வரும் மருந்துகளுக்கு கூடுதலாக செலவழிக்க வேண்டி வரும். கோவிட் தொற்று காலத்தில் பல அத்தியாவசிய மருந்துகளின் விலை சத்தமின்றி உயர்ந்துள்ளது. உதாரணமாக இரத்த உறைவை தடுக்கும் ஹேப்பாரின் மருந்தானது 50 விழுக்காடு விலை உயர்வுக்கும், அசித்ரோமைசின், வைட்டமின் உள்ளிட்ட மருந்துகளின் விலை 8 லிருந்து 10 விழுக்காடு உயர்ந்துள்ளது. இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மருந்துகளின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் 2000 ஆம் ஆண்டுக்குப் பின் தொடர்ந்து மூலக் கூறு மருந்துகளை உற்பத்தி செய்யும் ஆலைகள் மூடப்பட்டு வருகின்றன. ஐடிபிஎல் , ஹெச்ஏஎல்போன்ற மூலக்கூறு மருந்துகளை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள் ஒன்றிய அரசின் தவறான கொள்கையினால் உற்பத்தியில் சரிவை சந்தித்துள்ளன. முக்கியமாக பல தனியார் நிறுவனங்கள் தாராளமய கொள்கையினால் வெளிநாட்டு நிறுவனங்களோடு போட்டியிட முடியாது தங்களது மூலக்கூறு மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை மூடி அவற்றை வணிக வளாகங்களாக மாற்றி தங்கள் லாபத்தை நிலைநிறுத்திக் கொண்டன. இதன் காரணமாக முன்பு மருந்து துறையில் தன்னிறைவு பெற்றிருந்த இந்தியா தற்போது மூலக்கூறு மருந்துகளுக்கு வெளிநாட்டு இறக்குமதியை நம்பி இருக்க வேண்டியுள்ளது.

மருந்துகளின் விலையேற்றத்தை தடுக்கவும், மருந்து துறையில் இந்தியா தன்னிறைவு பெறவும் ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களான ஐடிபிஎல், ஹெச்ஏஎல் ஆகிய நிறுவனங்களுக்கு போதிய நிதி ஒதுக்கி அவற்றை புனரமைக்க வேண்டும்.  மருந்து நிறுவனங்களின் மருந்து வியாபாரத்திற்கான செலவுகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு முறையான வணிகத்திற்கான சட்ட வடிவத்தை அமைத்து முறையாக அமல்படுத்த வேண்டும். குறிப்பாக மருந்துகளின் மீதான தற்போதைய ஜிஎஸ்டி வரிவிதிப் பான 5 முதல் 18 விழுக்காடாக இருப்பதை முழுமையாக நீக்க வேண்டும். இதன்மூலம் மருந்துகளின் விலையை ஓரளவுக்கு உடனடியாக குறைக்க முடியும். எனவே ஒன்றிய அரசு மருந்து விலை உயர்வுக்கான அனுமதியை கைவிட்டு, சாமானிய மக்களின் சுமையை குறைக்க பொதுத்துறை மருந்து நிறுவனங்களை புனரமைப்பது, முறையான வணிகத்திற் கான சட்ட வடிவத்தை அமல்படுத்தி மருந்து நிறுவனங்களின் தேவையற்ற வியாபார செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஜிஎஸ்டி வரியிலிருந்து மருந்துகளுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.