tamilnadu

img

நீரில் மூழ்கியது எர்ணாகுளம் 2 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம், ஆக.31- கேரளத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் எர்ணாகுளம் நகரமே தண்ணீரில் மூழ்கியுள்ளது. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழைக்கு மேக வெடிப்பு தான் காரணம் என குசாட் ரேடார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செவ்வாயன்று (ஆக.30) எர்ணாகுளம் டவுன் ரயில்  நிலையம் அருகே புல்லேபாடியில் தண்டவாளத்தில் தண்ணீர் புகுந்தது. சிக்னல் சிஸ்டம் பழுதடைந்ததால், எர்ணாகுளத்துக்கு ரயில் சேவைகள்  பகுதியளவில் நிறுத்தப்பட்டன. வடக்கில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் எடப்பள்ளி மற்றும் ஆலுவா நிலையங்களிலும், கோட்டயத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் திரிபுனித்துராவிலும் நிறுத்தப்பட்டன. விரைவில் ரயில் சேவை தொடங்கப்பட்ட போதிலும் சிக்னல்  கோளாறை சரிசெய்ய முடிய வில்லை.

ஆலப்புழாவில் குட்டநாடு மற்றும் அப்பர் குட்டநாட்டின் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. குட்டநாட்டில் தண்ணீரில் தவறிவிழுந்து சசிதரன் (76) உயிரிழந்தார். காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பத்தனம்திட்டாவில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை மலைப்பாங்பான பகுதிகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் சனிக்கிழமை வரை கனமழை தொடரும் என  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மஞ்சள் எச்சரிக்கை (கனமழை) விடப் பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதால் வெள்ளிக்கிழமை வரை  மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இடைமலையாறு, கக்கி, பாணாசுரசாகர், பொன்முடி, சோலையார், குண்டலா, லோயர்பெரியார், கல்லார்குட்டி, மூழியார் ஆகிய அணைகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மலம்புழா அணையின் நான்கு ஷட்டர்களில் புதன்கிழமை காலை உபரிநீர் திறக்கப்பட்டது.

தாறுமாறானது ரயில் போக்குவரத்து

எர்ணாகுளம் டவுன் ஸ்டேஷன் மற்றும்  எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையம் அருகே  தண்ணீர் தேங்கியுள்ளதால் சிக்னல் சிஸ்டம் சேதமடைந்து ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எர்ணாகுளத்திற்கான ரயில் பயணம் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டதால் நூற்றுக்கணக்கான பயணிகள் பல்வேறு ரயில்களில் பல மணி நேரம் சிக்கிக் கொண்டு அவதிப்பட்டனர்.