tamilnadu

img

“ஆடி அசைந்து வரும் ஆழித்தேர் இந்தாண்டு ஓடி வந்தது”

பிரச்சனைகளைச்  சமாளித்து தேரை நிலைகொண்டு சேர்த்த பக்தர்கள்

திருவாரூர், ஏப்ரல் 2 - ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தேரோட்டத்தில் லட்சக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.  திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோ ட்டம் சனிக்கிழமை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கலை வாணன், நாகப்பட்டினம் தொகுதி மக்களவை  உறுப்பினர் செல்வராசு,  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். ஆழித்தேர் என்ற பெயருக்கு ஏற்றாற் போல் தேர்  96 அடி உயரமும், 360 டன் எடையும் கொண்டது. ஆழித்தேர் ஆடி அசைந்து வருவதைக் காண கண் கோடி வேண்டும் என புகழப்பட்ட திருவாரூர் ஆழித்தேர் தற்போது ஆடி அசைந்து வராமல் ஓடிச் செல்கிறது. 20 அடி தூரத்தை இரண்டு நிமிடத்தில் கடந்தது. குறிப்பாக வடக்கு வீதியில் 500 மீட்டர் தூரத்தை 15 நிமிடத்தில் ஓடிக் கடந்தது ஆழித்தேர்.

வேகமாக ஓடிய ஆழித்தேரை இழுக்க முடியாமல் முதியவர்கள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள் கீழே விழுந்தனர். உடனடியாக சிவப்புக் கொடி காட்டி தேரை நிறுத்தும்படி மக்கள் கோஷமிட்டனர்.  ஆனால் தேர்  நிற்பதாக இல்லை வேகமாக ஓடிக் கொண்டேயிருந்தது. இதனால் சமயோ சிதமாக செயல்பட்ட இளைஞர்கள்  கீழே விழுந்தவர்களைத் தூக்கி, அசம்பா விதம் ஏற்படும் முன்னர் அவர்களை  காப்பாற்றினர்‌. கீழே விழுந்ததில் முதி யவர்கள் மற்றும் கைக்குழந்தையுடன் வந்திருந்த பெண்களுக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.   தேர் வேக மாக ஓடியதால் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் கீழே விழுந்ததில் காயமடைந்தனர்.

மரங்களை வெட்டியதால் வெயிலில் மக்கள்

பத்து வருடங்களுக்கு முன்பு தேரோடும் வீதிகளில் 500-க்கும் மேற் பட்ட மரங்கள் இருந்தன.  தார்ச் சாலை யை சிமெண்ட் சாலையாக மாற்றிய போது 300-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு வெட்டிச்  சாய்க்கப்பட்டன. தேரோட்டத்தின்போது மரங்களால் சிக்கல் ஏற்பட்டுவிடக்கூடாது  என்பதற்காக கிளைகளை வெட்டுவ தாக கூறி மரத்தையே வெட்டி வீழ்த்தினர்.  இதனால் ஆழித்தேரை இழுக்க வந்த மக்கள் கடும் வெயி லில் தவித்தனர். குறிப்பாக கைக்குழந் தையுடன் வந்திருந்த தாய்மார்கள் நிழலைத் தேடி அங்கும் இங்கும் அலைந்தது பரிதாபமாக இருந்தது. 

மூடாத சாக்கடைக்குள் விழுந்த மக்கள்

தேரோடிய வீதிகளில் சாலை விரிவாக்கப் பணி எனக் கூறி கழிவுநீர் வடிகால் வெட்டப்பட்டது. குறிப்பாக மேலரதவீதி பகுதியில் திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் சுவரை ஒட்டி கழிவு நீர் வடிகால் கட்டப்பட்  டது. அது முறையாக மூடப்பட வில்லை. அளவில்லாத கூட்டத்தின் காரண மாக, தேர் இழுத்த மக்களில் சிலர்  மூடப்படாத கழிவு நீர் வடிகாலுக்குள் தவறி விழுந்தனர்.  சாலையை விட ஒரு அடி உயரத்திற்கு வடிகால்கள்  கட்டப்பட்டுள்ளன. இதனால் தேர் அருகில் வந்த போது  ஓரமாக ஒதுங்க முயன்றவர்கள் சாலையை விட ஒரு அடி உயரமாக இருந்த வடிகாலில் தவறி விழுந்தனர்.

கழிவறைக்குச் செல்ல முடியாமல் அவதி

உலகப் பிரசித்தி பெற்ற தேர்த்  திருவிழா என்பதைக் கருத்தில் கொண்டும் மக்களின் அவசரத் தேவை யை கருத்தில் கொண்டும் ஆங்காங்கே   தற்காலிக கழிப்பறை வசதி ஏற்படுத்தப் படுவது வழக்கம்.  ஆனால், வடக்கு  வீதியில் நிரந்தரக் கழிப்பறை இருந்த இடத்தில் சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதால் கழிப்பறை இடிக்கப்பட்டது; அதே தற்காலிகமாக  கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டிருந் தது. ஆனால் முறையாக வடிகால் வசதி அமைக்காததால் வெளியேறிய கழிவுநீர்  சாலையோரத்தில் தேங்கி நின்றதால் துர்நாற்றம் வீசியது.  இவ்வளவு பிரச்சனைகளையும் பக்தர்கள் சமாளித்துத்தான் ஆழித்தேரை நிலை கொண்டு வந்து சேர்த்தனர் உற்சாகமாக!

- லட்சுமி ராஜன்