tamilnadu

img

10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு விவகாரம்

சென்னை, ஏப்.13- வன்னியர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 10.5 விழுக்காடு இட  ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் குறித்து  தமிழ்நாடு சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. பேரவையில்  வியாழனன்று (ஏப்.13)  கேள்வி நேரம் முடிந்ததும், தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திருப் பது தொடர்பாக பாமக உறுப்பினர் கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீது பேசிய அக்கட்சியின் சட்டமன்றகுழுத் தலைவர் கோ.க. மணி, “ஆணையத் திற்கு ஒரு மாதம் கால அவகாசம் நீட்டித் தால் போதாதா ? எதற்காக 6 மாதம்  நீட்டிக்க வேண்டும் ?  என்று வினவினார்.  தொடர்ந்து பேசிய அவர், பேரவைத் தலைவர் குறித்து கூறிய வார்த்தைகள் அனைத்தும் அவை குறிப்பில் இருந்து  நீக்கப்பட்டன. அதற்கு பாமக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

நீதிமன்ற தடை ஏன்?

அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,“10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டமன்ற பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருந்த நாளில் அவசர கோலத்தில்  கொண்டுவரப்பட்டது. அதனால் தான் உயர்நீதிமன்றம்  தடை விதித்துவிட்டது. இதை எதிர்த்து  உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் நீதியரசர் பாரதிதாசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் கேட்டுக் கொண்ட தன் அடிப்படையில் தான் ஆணை யத்திற்கு நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய அவை  முன்னவர் துரைமுருகன், “சமூக நீதியை காப்பதில் அனைத்து கட்சிக்கும்  பங்கு உண்டு. வன்னியர் உள் ஒதுக்கீடு  அதிமுக ஆட்சியில் அவசரமாக வெளி யிட்டாலும் அதனை திமுக ஆட்சியிலும் செயல்படுத்தினோம். மீண்டும் அந்த  தவறு வந்துவிடக்கூடாது என்பதற்காக  6 மாத கால அவகாசம் வழங்கியுள் ளோம்.

ஆணையம் 4 மாதத்திலே அறிக்கை தந்தால் உங்களை விட முதல மைச்சர் மகிழ்ச்சியடைவார்” என்றார். அதனை தொடர்ந்து பேசிய மணி 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு  நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை யுடன் இருக்கிறோம்.ஒரு மாதத்திற்கு மட்டும் ஆணையத்தின் கால அவ காசத்தை நீடித்தால் போதும் என்றார். முன்னதாக பேசிய வேல்முருகன்  இட ஒதுக்கீட்டிற்காக போராடியவர் களை சுட்டுக் கொன்றது யார்? என்றார். இதற்கு அதிமுக உறுப்பினர் கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சில கருத்துக்களை தெரிவித்தார். இதற்கும்  அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பேரவையில் மீண்டும் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனை அடுத்து அமைச்சர் பேசியது அனைத்தும் நீக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி,“ வன்னி யர் இட ஒதுக்கீடு உணர்வுப்பூர்வமான பிரச்சனை என்பதால் பொறுமையாக கையாள வேண்டும். முதலமைச்ச ரும், நீர்வளத்துறை அமைச்சரும்  உரிய முறையில் விளக்கமளித்துள்ள னர். வேல்முருகன் கூறிய கருத்துக்க ளையும் அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றார். மீண்டும் குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வேளாண் அமைச்சர்  பேசிய கருத்துக்கள் நீக்கப்பட்டு விட்டன. ஆனால் வேல்முருகன் யாரை யும் எந்த கட்சியும் குறிப்பிட்டு பேச வில்லை. நீக்க வேண்டிய அவசியமும்  இல்லை என்று கூறியதைத் தொடர்ந்து  விவாதம் முடிவுக்கு வந்தது.